'ரமணா' ஸ்டைலில் புள்ளிவிவரத்தை அடுக்கி விஜயகாந்த்தை சமரசப்படுத்திய அன்புமணி ராமதாஸ்
சென்னை: நம்முடைய பொது எதிரி ஜெயலலிதாதான். அவரை வீழ்த்த நாம் இருவரும் இணைவது அவசியம். எனவே இணைந்து செயல்படுவோம் என்று தேமுதிகவும், பாமகவும் ரகசியமாக பேசி முடிவு செய்த பிறகே கூட்டணியில் சுமூக நிலை ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வைத்து தனியாக சந்தித்து இதுதொடர்பாக மனம் விட்டுப் பேசினராம். இந்தப் பேச்சுவார்த்தையின்போது விஜயகாந்த்தும், டாக்டர் அன்புமணி ராமதாஸும் மனம் விட்டுப் பேசியதைத் தொடர்ந்து இதுநாள் வரை இருந்து வந்து சங்கடங்கள், கருத்து வேறுபாடுகள் அப்படியே கரைந்து போய் விட்டதாம்.
இதைத் தொடந்தே புன்னகை மலர இருவரும் சால்வை போர்த்தியபடியும், சிரித்தபடியும், கை குலுக்கியபடியும் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்துள்ளனர்.
ஆகாத கட்சிகள்...
தேமுதிக தொடங்கி அது செயல்பட ஆரம்பித்ததுமே, அது பாமகவுக்கு எதிரான கட்சியாக விஸ்வரூபம் எடுக்கப்பட்டது. பாமகவினரும், தேமுதிகவைத்தான் தங்களது முதல் எதிரியாக பார்த்தனர்.
வன்னியர் வாக்கு வங்கியை பறித்த தேமுதிக
அது நாள் வரை வன்னியர் வாக்கு வங்கி என்றால் அது பாமகவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது. ஆனால் அதை முதல் முறையாக தகர்த்தார் விஜயகாந்த்.
பண்ருட்டியார் ஐடியா
பண்ருட்டி ராமச்சந்திரன்தான் இதற்கு மூ்ல காரணம் என்கிறார்கள். எப்படி தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு வங்கி சற்று பலமானதாக இருக்கிறதோ, அதேபோல வட மாவட்டங்களில் வன்னியர் வாக்கு வங்கிதான் பலமானது. இதை விஜயகாந்துக்கு எடுத்துக் கூறி அதைக் கவரும் வழி வகைகளை வகுத்து அதற்கேற்ப செயல்பட வைத்தவர் பண்ருட்டியார் என்று அப்போதே பேசப்பட்டது.
பாமகவை அரள வைத்த தேமுதிக
அதன் பின்னர் திட்டமிட்டு காய் நகர்த்தி, பாமகவின் கோட்டைக்குள் மெல்ல மெல்ல யானை போல கலகம் விளைவிக்க ஆரம்பித்தது தேமுதிக. அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. எதிர்பாராத வகையில் பல முக்கிய தோல்விகளைச் சந்தித்தது பாமக.
ராமதாஸ் சொன்னால்
முன்பெல்லாம் டாக்டர் ராமதாஸ் சொன்னால் அவர் சொல்பவருக்கே வாக்களித்து வந்த வன்னிய சமுதாயத்தினர் தேமுதிக பக்கமும் திரும்பத் தொடங்கினர். இது பாமகவை அதிர்ச்சி அடைய வைத்தது.
விஜயகாந்த் மீது கோபம் காட்டிய ராமதாஸ்
இதையடுத்து விஜயகாந்த்தைப் பற்றிப் பேசுவதையே நிறுத்தினார் ராமதாஸ். அவரை நடிகர், குடிகாரர், போதையில் இருப்பவர், தெளிவில்லாமல் பேசுபவர் என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்.
பதிலடி கொடுத்த விஜயகாந்த்
பதிலுக்கு விஜயகாந்த்தும் ராமதாஸையும், பாமகவையும் விமர்சித்து வந்தார்.
சீட் பெறுவதிலும் பாமகவை ஓரம் கட்டிய தேமுதிக
இந்த நிலையில்தான் எதிர்பாராத விதமாக இரு கட்சிகளும் பாஜக தலைமையில் அணி சேரும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் இங்கும் பாமகவுடன் கடுமையாக மோதியது தேமுதிக. இதில் வெற்றி தேமுதிகவுக்கே. 14 இடங்களைப் பெற்றதோடு, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய முக்கியத் தொகுதிகளையும் தேமுதிக தட்டி்க் கொண்டு போய் விட்டது.
தனி அறையில் மனம் விட்ட சந்திப்பு
இதையடுத்து இதற்கு மேலும் தனித் தனியாக செயல்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வைத்துத் தனி அறையில் விஜயகாந்த்தும், அன்புமணியும் மனம் விட்டுப் பேசியுள்ளனர். அவர்களுடன் சுதீஷ், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இணைந்து செயல்படுவோம்
அப்போது நாம் நமது மன மாச்சரியங்களை விட்டு விட்டு இணைந்து செயல்படலாம். நமது எதிரி ஜெயலலிதாதான். எனவே அவரை வீழ்த்த இணைந்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று இரு தரப்பும் உணர்ந்து பேசி சமரசமாகியுள்ளதாம்.
பலம் என்ன..
இரு கட்சியினரும் இணைந்தால் கிடைக்கும் பலன்கள், லாபங்கள், வாக்கு பலம் உள்ளிட்ட அத்தனை விஷயத்தையும் விரிவாகப் பேசியுள்ளனர். அதன் இறுதியில் இரு தரப்பும் சகஜ நிலைக்கு வந்து தோழமை உணர்வு அங்கு பெருகி ஓடியதாம்.
'ரமணாவுக்கே' புள்ளிவிவரம் காட்டிய அன்புமணி
நேற்றைய சந்திப்பின்போது பல விவரங்களை அன்புமணி ராமதாஸ், பக்குவமான முறையில் புள்ளிவிவரத்துடன் அடுக்கடுக்காக எடுத்து வைத்தபோது அதை நிதானமாகவும், பொறுமையாகவும், ஆச்சரியத்துடனும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டிருந்தாராம். கடைசியில் அன்புமணியின் கையைக் குலுக்கிய விஜயகாந்த், இணைந்து செயல்படுவோம். தீவிரமாக செயல்படுவோம் என்று உறுதிபடத் தெரிவித்தபோது கூடியிருந்தோர் முகங்களில் நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டதாம்
ராமதாஸ் 'சிரிக்க' நாளாகும்!
அதேசமயம், இப்போதைக்கு டாக்டர் ராமதாஸ் விஜயகாந்த்துடன் மேடை ஏறும் வாய்ப்பில்லை என்கிறார்கள். அவர் விஜயகாந்த்துடன் சகஜ நிலைக்கு வர நாளாகும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், சட்டசபைத் தேர்தலுக்குள் இருவரும் சகஜமாகி விடுவார்கள் என்ற நம்பிக்கை இரு கட்சியினர் மத்தியிலும் உள்ளதாம்.