'கேப்டன்’ பெயர்.. புகாரில் முகாந்திரம் இருந்தால் விஜயகாந்த் மீது வழக்கு: உயர் நீதிமன்றம்
சென்னை: கேப்டன் என்ற பதவியின் பெயரை பயன்படுத்துவது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு எதிரான புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகரை சேர்ந்தவர் கே.தண்டபாணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

இந்திய ராணுவத்தின் மருத்துவ துறையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி, 1992-ம் ஆண்டு ஓய்வுப்பெற்றேன். சினிமா நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த் என்ற விஜயராஜூ, தன் பெயருக்கு முன்பு கேப்டன் என்ற பதவியின் பெயரை பயன்படுத்தி வருகிறார்.
இந்திய ராணுவத்தில், கேப்டன் பதவி என்பது மிக உயர்ந்த பதவியாகும். ஆனால், விஜயகாந்த் இந்திய ராணுவத்தில் பணியாற்றவில்லை.
எனவே கேப்டன் என்ற பதவியின் பெயரை அவர் பயன்படுத்துவது சட்டவிரோதமாகும். மேலும் அவரது நடவடிக்கை இந்திய ராணுவத்தின் மரியாதைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது.எனவே இதுகுறித்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி சாலிகிராமம் போலீஸ் நிலையத்தில், விஜயகாந்துக்கு எதிராக புகார் செய்தேன்.
ஆனால், இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எம்.பாலாஜி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் மீண்டும் ஒரு புகாரை சாலிகிராமம் போலீசாரிடம் வழங்கவேண்டும். அந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யும் முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.
ஒருவேளை புகார் மனு மீதான விசாரணை நடத்த போலீசார் விரும்பினால் அந்த விசாரணையை ஒரு வாரத்துக்குள் முடிக்கவேண்டும். மனு மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications