சென்னைக்கு ஓடி வந்து உதவிய மக்களே!... கன்னியாகுமரிக்கும் உதவலாமே!
சென்னையில் பெருவெள்ள பாதிப்பு என்றவுடன் பலரும் ஓடி வந்து உதவிக்கரம் நீட்டினார்கள், அதே போன்று தற்போது உருக்குலைந்திருக்கும் குமரியை மீட்க எத்தனை உதவிக்கரங்கள் நீண்டிருக்கின்றன.
Recommended Video
கன்னியாகுமரி : சென்னையில் 2015ம் ஆண்டு புரட்டிப்போட்ட வெள்ளத்தால் நிலைகுலைந்து போன சென்னையை மீட்டெடுக்க வெளி மாநிலங்களில் இருந்து பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள், தற்போது ஓகியால் உருக்குலைந்திருக்கும் கன்னியாகுமரியை மீட்க எத்தனை பேர் அங்கு சென்றிருக்கிறார்கள்.
கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் சென்னையை புரட்டிப் போட்ட கனமழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அடையாற்றுப் பகுதிகளை மூழ்கடித்துவிட்டு சென்றது. இதனால் சென்னை உருக்குலைந்து போனது, ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது.
இதோடு வீட்டில் இருந்த பொருட்கள் நாசமடைந்ததோடு, பலர் உதவிக்காக காத்திருந்த நிலையில் சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் வந்து குவிந்தன. திருப்பூர், கோவை உள்ளிட்ட பின்னலாடை நிறுவனங்கள் தங்களின் ஆடை தயாரிப்புகள், போர்வை உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் திரண்டு வந்து உதவி
சென்னை மீண்டும் அதன் நிலைக்கு திரும்ப பலரும் நிதியுதவி செய்தனர். வெளி மாவட்டங்களில் இருந்து இளைஞர்களும் திரண்டு வந்து வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிகளை செய்தனர்.
மின்சாரம் இல்லாமல் தவிப்பு
இதே போன்று தான் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. மின்சாரம் இல்லை, குடிநீர் இல்லை, தொலைதொடர்பு வசதி இல்லை என்று மக்கள் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
இளைஞர்களே களத்தில்
உதவி கேட்க வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீரும் சூழ்ந்துள்ளதால் திக் திக் பயத்தோடு பொழுதை கழித்து வருகின்றனர் மக்கள். பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்களை அப்புறப்படுத்துவதற்காக அதிகாரிகளை நம்பி இருக்காமல், தாங்களே களத்தில் இறங்கி முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர் இளைஞர்கள்.
|
குமரி இளைஞர்கள் கெத்து
சென்னையில் பலதரப்பட்ட மக்களும் வசிப்பதால் அதற்கு ஒரு துன்பம் என்றதும் பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். ஆனால் தற்போது கன்னியாகுமரியை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களே என்பது சமூக வலைதளங்களில் உலவும் ஒரு குற்றச்சாட்டாக உள்ளது. எனினும் குமரி இளைஞர்கள் தான் கெத்து என்று மீட்புப் பணியில் இறங்கியுள்ளனர் அந்த மாவட்டத்து இளசுகள்.