சீனியர் அதிகாரிகளை ஓரம்கட்டி டி.கே.ராஜேந்திரன் "பொறுப்பு" டிஜிபியானது எப்படி?
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரன் சீனியர் அதிகாரிகள் 4 பேரை ஓரம்கட்டிவிட்டுதான் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபியாக இருந்த அசோக்குமார் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடும் அதிருப்தியை தலைமைச் செயலகத்தில் உள்ள கார்டனுக்கு நெருக்கமான அதிகாரிகள் டீம் உருவாக்கிவிட்டு குளிர்காய்ந்திருக்கிறது. இதனால் வெறுத்துப் போன அசோக்குமார் நள்ளிரவில் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டுப் போய்விட்டார்.
அப்போது புதிய டிஜிபி யார் என்ற கேள்வி வந்தது. 1980-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான அர்ச்சனா ராமசுந்தரம், 1983-ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரிகளான ராதாகிருஷ்ணன், மகேந்திரன், 1984-ம் ஆண்டு பேஜ்ட் ஜார்ஜ்....இவர்களையடுத்து கடைசியாகத்தான் 1984-ம் ஆண்டு பேட்ஜ் டி.கே. ராஜேந்திரன் இருக்கிறார்.
இதுதான் நடைமுறை
பொதுவாக புதிய டிஜிபி நியமிக்கும்போது சீனியர்கள் 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அல்லது சீனியர்களிடம் கருத்து கேட்டு (தடை இல்லாத சான்றிதழ் போல) ஜூனியர்களை டிஜிபியாக நியமிக்க வேண்டும். ஆனால் இப்படி எதையும் செய்யாமல் 'பொறுப்பு' டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதன் பின்னணிதான் இப்போது தலைமை செயலகத்தில் ஹாட் டாபிக்.
அர்ச்சனராமசுந்தரம்
புதிய 'ரெகுலர்' டிஜிபி பதவிக்கான சீனியர் லிஸ்டில் முதலில் இருப்பவர் அர்ச்சனா ராமசுந்தரம்... அவர் ஏற்கனவே ஜெ.வுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்.. மத்திய அரசுப் பணிக்கும் போய்விட்டார். அதனால் நிச்சயம் தமிழக அரசு கேட்கும் எதற்கும் பாசிட்டிவ்வான பதிலை அவர் தரப்போவதில்லை... அத்துடன் நாம போய் அர்ச்சனாராமசுந்தரத்திடம் ஒப்பீனியன் கேட்பதா? என்ற அரசு தரப்பின் ஈகோ ஒரு காரணம்..
திமுக அனுதாபி
அவருக்கு அடுத்ததாக இருக்கும் ராதாகிருஷ்ணனை திமுக ஆதரவாளர் என முத்திரை குத்தி வைத்துவிட்டனர். 3-வது இருக்கும் மகேந்திரன், நேர்மையானவர் என்று கூறப்பட்டாலும் அவருக்கான 'லாபி' டீம் என்பது இல்லாமல் போனது.
ஜார்ஜ் மீது அதிருப்தி
4-வது இடத்தில் இருக்கும் ஜார்ஜ் மீது டிஜிபியாக இருந்த அசோக்குமார் 'புண்ணியத்தால்' ஜெ.வுக்கு அதிருப்தி. ஆகையால் 5வது இடத்தில் டி.கே. ராஜேந்திரனை டிக் செய்தது கார்டனுக்கு நெருக்கமான 'அதிகாரிகள்' டீம்...
அசோக்குமார்
அத்துடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த நாள் முதலே அசோக்குமார் மீது இந்த டீம் ஏகப்பட்ட புகார்களை ஜெ.விடம் தெரிவித்து வந்ததாம்.. இதனால் கடுப்பாகிப் போன ஜெயலலிதா அசோக்குமாரை டம்மியாக்கிவிட்டு சட்டம் ஒழுங்கு பொறுப்பை அதிகாரப்பூர்வமாக இல்லாமல் பார்க்குமாறு டி.கே. ராஜேந்திரனுக்கு உத்தரவிட்டிருந்தாராம்.
உளவுத்துறை டூ பொறுப்பு டிஜிபி
இதனையடுத்து அதிகாரிகள் நியமனம், இடமாறுதல் என அனைத்திலும் டி.கே.ராஜேந்திரன் கொடிகட்டிப் பறந்ததாம்.... தற்போது அசோக்குமார் தாமாகவே விருப்ப ஓய்வு கோரியதால் உடனே அதை ஜெ.வும் ஆமோதித்தார். இதன்பின்னர் ராஜேந்திரனை உளவுத்துறை டிஜிபியாக முதலில் நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த நியமனத்துக்கான மாநில அரசுக்கான அதிகாரம் இருக்கிறது. ஆகையால் முதலில் உளவுத்துறை டிஜிபியாக்கிவிட்டு சட்டம் ஒழுங்குக்கு "பொறுப்பு" டிஜிபியாகவும் நியமித்திருக்கிறது.
இனி அர்ச்சனா ராமசுந்தரம், ராதாகிருஷ்ணன் இருவரும் ஓய்வு பெற்ற பின்னர்தான் டி.கே. ராஜேந்திரனை முறைப்படி ரெகுலர் டிஜிபியாக அறிவிக்கவும் முடியும். அதுவரை டி.கே. ராஜேந்திரன் 'பொறுப்பு' டிஜிபியாகவே தொடருவார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.