புதுவை அதிகாரிகள் நேர்மையாக இல்லை... கிரண் பேடி பரபர குற்றச்சாட்டு: வீடியோ
புதுச்சேரி: புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தியது தேவையற்றது. அதிகாரிகள் மக்களுக்கூ சேவை செய்பவர்களாக இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரியில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூன்று எம்.எல்.ஏக்களை முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக நியமனம் செய்தர் எனக் கூறி ஆளும் காங்கிரஸ் அரசு முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று அங்கு முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி என்.எஸ்.எஸ் மாணவர்களுடன் சேர்ந்து லாஸ்பேட்டையில் சைக்கிளில் பயணம் செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டத்துக்கு உட்பட்டே எம்.எல்.ஏக்களை நியமனம் செய்தேன். ஆனால் புதுச்சேரியில் அதிகாரிகள் மக்களுக்காக வேலை செய்வதில்லை. இங்கு லஞ்சம் மலிந்துள்ளது. அதிகாரிகள் உண்மையாகவும் நேர்மையாகவும் வேலை பார்ப்பது இல்லை.
அதிகாரிகள் மக்கள் நினைத்தவுடன் அணுகும் வகையில் இருக்க வேண்டும். புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்வதே என் நோக்கம் என கூறினார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கிடையே முட்டலும் மோதலுமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.