நான் உள்ளே வரனும்னா சசிகலா கட்சியை விட்டு வெளியே போகனும்.. 'கறார்' ஓபிஎஸ்
சசிகலாவும் தினகரனும் அதிமுகவை விட்டு வெளியேறினால்தான் நாங்கள் இணைவோம் என ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை: தாங்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டுமானால் சசிகலாவும் அவரது குடும்பமும் கட்சியைவிட்டு முதலில் வெளியேற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமான நிபந்தனையை விதித்துள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா சிறை கம்பிகளை எண்ணுகிறார். அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச்செயலர் தினகரனோ சிறை கம்பிகளை எண்ணப்போகிறார்.
இணைப்பு பேச்சு
இந்த நிலையில் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. சசிகலா கோஷ்டி அமைச்சர்கள் அனைவருமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஓபிஎஸ் கோஷ்டியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி வருகின்றனர்.
ஜெ. மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை
இது தொடர்பாக பெரியகுளத்தில் இன்று செய்தியாளர்களை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பது எங்களது முதல் நிபந்தனை.
நோ சசிகலா அண்ட் கோ
இரண்டாவதாக சசிகலாவை பொதுச்செயலராக ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்பதை எங்களால் ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
சகிக்க முடியாது
டிடிவி தினகரனின் நடவடிக்கையால் அதிமுகவுக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டது. இதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. சசிகலா குடும்பம் அதிமுகவை விட்டு வெளியேறினால்தான் நாங்கள் மீண்டும் இணைவோம் என திட்டவட்டமாக கூறினார் ஓபிஎஸ். சசிகலா அண்ட் கோ இல்லாத அதிமுகதான் என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.