சட்டசபையில் அமளி செய்த எதிர்கட்சியினரை ஆவேச பேச்சில் அடக்கிய ஜெ.,
சென்னை: சட்டசபையில் வரலாற்று சிறப்பு மிக்க வலுவான எதிர்கட்சியாக இருக்கிறோம். 89 பேரை தேர்ந்தெடுத்து ஆளுங்கட்சியை கண்காணிக்க மக்கள் அனுப்பியிருக்கின்றனர் என்றெல்லாம் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசினாலும், பெரும்பான்மை பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக அமர்ந்துள்ள ஜெயலலிதாவின் ஆவேச பேச்சிற்கு பதில் சொல்ல முடியிமல் திணறித்தான் போகின்றனர்.
15வது சட்டசபை ஆளுநர் உரையுடன் 16ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையில் கச்சத்தீவு விவகாரம் இடம் பெற்றுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. திங்கட்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை கச்சத்தீவு விவகாரத்தினால் அவையில் அமளி துமளி ஏற்பட்டது.
கச்சத்தீவு பற்றி ஜெயலலிதா பேச அதற்கு கருணாநிதி அறிக்கை வெளியிட என ஊடகங்களில் பிரதான செய்தியே கச்சத்தீவுதான் என்றானது. புதன்கிழமை எதிர்கட்சித்தலைவர் பேச, அதற்கு வியாழக்கிழமை ஒட்டுமொத்தமாக பதில் கொடுத்தார் ஜெயலலிதா. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒன்றரை மணி நேரம் பேசிய ஜெயலலிதாவின் பேச்சில் அனல் பறந்தது.
கச்சத்தீவு பிரச்சினை
1974ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது பற்றியும், அதனைத் தடுக்க கருணாநிதி தவறி விட்டது பற்றியும் விரிவாக நான் இந்த மாமன்றத்தில் 20.6.2016 அன்று எடுத்துக் கூறினேன். 21.6.2016 அன்று கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கச்சத்தீவை தாரை வார்க்க தான் எந்த காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை, உடன்பட்டதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
முரண்பட்ட கருத்து
இது தொடர்பாக நான் கேட்கும் கேள்விகள் என்னவென்றால்,1974-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தவுடன்தான் அது பற்றி தெரியும் என்று சொன்னதும், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தி.மு.க அரசு வலியுறுத்தி தான் சிலஷரத்துகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டன என்று கூறுவதும், ஒன்றுக்கொன்று முரண்பாடான தில்லையா? சில ஷரத்துகள் சேர்க்கும்படி சொல்லப்பட்டது என்றாலே, தாரை வார்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது தானே பொருள் ? என்று ஜெயலலிதா கேட்டதற்கு தி.மு.க.வினர் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
கூச்சல் போடுவதா?
சில நிமிடங்கள் பேச்சை நிறுத்திய ஜெயலலிதா, பேச்சை தொடர்ந்தார். நான் இந்த கேள்விகளை உங்களிடம் கேட்கவில்லை கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் பதில் சொல்லட்டும், நீங்கள் அமருங்கள். பதில் சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதா? பதில்சொல்ல முடியவில்லை என்றால், கூச்சல் போடுவதால் என்ன ஆகப்போகிறது?உங்கள் தலைவர் பதில் சொல்லட்டும்.
திமுக தலைவர் யார்?
உங்கள் தலைவர், தலைவர் தானா? அல்லது இங்கே இருக்கின்ற எதிர்கட்சித் தலைவர் தான் உங்கள் தலைவரா? கூச்சல் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் கேட்கும் கேள்விகளைக் கேட்டே தீருவேன். எனக்குப் பேச அனுமதி தாருங்கள்.
முடியாவிட்டால் அமருங்கள்
அவர்களது தலைவர், தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர். அவர் இங்கே வந்து பதில் சொல்லி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, வெளியே அறிக்கை கொடுத்து கொண்டிருக்கிறார். அந்தஅறிக்கையை பற்றி தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். உங்களால் முடியவில்லை என்றால் உட்காருங்கள்.
தொடர் ரகளை
அறிக்கை கொடுத்தவரே இங்கே வந்து பதில் சொல்லட்டும். நீங்கள் உட்காருங்கள். இன்னும் சில நிமிடங்களில் எனது பதிலுரையை முடித்துவிடுவேன். அதன் பின்னர் அவர்கள் என்ன பேச விரும்பினாலும் தாங்கள் (சபாநாயகர்) அனுமதிக்கலாம். என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ஆனால் தி.மு.க.வினர் அதை ஏற்காமல் ரகளையில் ஈடுபட்டப்படியே இருந்தனர்.
வெளிநடப்பு
அப்போது சபாநாயகர் தனபால் முதல்வர் ஜெயலலிதாவே பெருந்தன்மையாக தெரிவித்திருக்கிறார். எனவே அமைதியாக முதல்வர் பேச்சை கேளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
கச்சத்தீவு என்றால் ஓடுவதா?
இதையடுத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கிட்டதட்ட ஒன்றரை மணிநேரம் இதுவரை எதிர்க்கட்சி தி.மு.க. உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து எனது உரையைக் கேட்டார்கள். ஆனால் கச்சத்தீவு என்று சொன்னவுடனே அவர்களால் பதில் சொல்ல முடியாது என்பது தெரியும். கச்சத்தீவைப் பற்றி சில கேள்விகளை நான் எழுப்ப விரும்புகிறேன் என்று சொன்னவுடன் ஓட்டம் பிடித்துவிட்டார்கள்.
இதைத்தான் எதிர்பார்த்தேன்
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா, இதைத்தான் எதிர்பார்த்தேன். பதில் சொல்ல முடியவில்லை என்றால், கச்சத்தீவை பற்றி நான் பேசினால், முதலில் கூச்சல் போட வேண்டியது, அதன் பின்னர் அந்த கூச்சலால் இங்கே எதையும் தடை செய்ய முடியவில்லை என்றதும், ஓட்டம் பிடிக்க வேண்டியது என்றார். அப்போது சபாநாயகர் உட்பட அவையில் இருந்த அனைவருமே சிரித்தனர்.
அறிக்கை வெளியிடுவதா?
கச்சத்தீவுபிரச்சினை பற்றி கடந்த 20ம் தேதி அன்று நான் இங்கே சில கருத்துகளைத் தெரிவித்தேன். அதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த அவைக்கு வெளியே ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். 21ம் தேதி அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கச்சத்தீவைப் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கருணாநிதி வரட்டும்
அனைவருக்கும் நான் நினைவுபடுத்த விரும்புவது, கருணாநிதி இந்த அவையின் உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு இந்த அவைக்கு வருவதற்கு எல்லா உரிமையும் உண்டு. அவர் இந்த அவைக்கு வந்திருக்கலாம். அவருடைய கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம். நான் கேட்கும் கேள்விகளுக்கு அவரே இங்கே பதில் அளித்திருக்கலாம். சட்டசபைக்கு வராமல், வெளியில் இருந்து கொண்டு அறிக்கை விடுகிறார்.
கேள்விகளை கேட்கிறேன்
தலைவர் கருணாநிதி வேண்டுமென்றால் இந்த அவைக்கு வரலாம். பதில் சொல்லலாம். இவர்களுக்கு கச்சத்தீவை பற்றி எதுவும் தெரியாது என்றால், பேசாமல் இருக்கலாம். எப்படி முதல் அறிக்கையை கருணாநிதி வெளியில் இருந்து கொண்டு விட்டாரோ, அதேபோலவே இன்று நான் எழுப்பும் கேள்விகளுக்கும் கருணாநிதியே பதில்சொல்லட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் அதற்கு மாறாக கச்சத்தீவு என்று சொன்னவுடனேயே ஓட்டம் பிடித்து விட்டார்கள். நான் கேட்க வேண்டிய கேள்விகளை இப்போது நான் கேட்டு முடிக்கிறேன்.
வழக்கு தாக்கல் செய்யாதது ஏன்?
அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சமாதானம் செய்து பல உரிமைகளுக்கு வழி வகுக்கப்பட்டன என்று தனது அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பதிலிருந்தே, கச்சத் தீவு தாரை வார்ப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டார் என்று தானே பொருள்? ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் இது பற்றி வழக்குப் போடப்படும் என்று தெரிவித்தும், தமிழக அரசு ஏன் எந்த வழக்கையும் அப்போது தாக்கல் செய்யவில்லை?.
உச்சநீதிமன்றத்தில் மனு
2008ம் ஆண்டு தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தில் நான் வழக்கு தாக்கல் செய்து, அதன் பின்னர், 2011ம் ஆண்டு, என்னால் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்ட பின், தி.மு.க.வால் அரசியல் காரணங்கள் மற்றும் 2014ம் ஆண்டைய நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தானே 10.5.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பதில் மனு ஏன் தாக்கல் செய்யவில்லை
என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பேரில், உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய போது, கருணாநிதியின் தலைமையிலான அப்போதைய தமிழக அரசு ஏன் கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என பதில் மனுதாக்கல் செய்யவில்லை?
உண்மைக்கு மாறான கருத்து
அப்போதைய தி.மு.க அரசு வலியுறுத்தியதால் தான் கச்சத்தீவுப் பகுதியில்மீன் பிடிக்கும் உரிமை, மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக்கொள்வதற்கான உரிமை, 1974-ம் ஆண்டு ஒப்பந்த ஷரத்துகளில்சேர்க்கப்பட்டன என்பது உண்மைக்கு மாறான கருத்தல்லவா? ஏனெனில், இதுபோன்ற எந்த ஷரத்தும் 1974-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் இல்லையே ?இவற்றுக்கெல்லாம் தி.மு.க தலைவர் கருணாநிதி பதில் கூறுவாரா? என்று கேட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அடுக்கடுக்கான கேள்விகளால் சட்டசபையே அதிர்ந்தது.