வருமான வரித்துறைக்கு எதிராக வழக்கு தொடருவேன்.. போயஸ் இல்லம் முன்பு நின்று தீபா சூளுரை
Recommended Video
சென்னை: ஐடி ரெய்டு நடைபெறும் போயஸ் இல்லத்திற்கு, ஜெ. அண்ணன் மகள் தீபா வந்திருந்தார்.
தனது கார் டிரைவர் ராஜாவுடன் ஜெ. அண்ணன் மகள் தீபா நள்ளிரவில் போயஸ் இல்லம் வந்திருந்தார். அவரை உள்ளே விட காவல்துறை மறுத்துவிட்டது. காவல்துறையினருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் போலீசார் அவரை உள்ளேவிட மறுத்துவிட்டனர்.
பின்னர் நிருபர்களிடம் தீபா கூறியதாவது: நான்தான் போயஸ் இல்லத்தின் வாரிசு. ஆனால் எனக்கு எந்த நோட்டீசும் அளிக்காமல் ஐடி அதிகாரிகள் இங்கு சோதனை நடத்துகிறார்கள். இது பற்றி கேட்கவே நான் வந்தேன். காவல்துறையினர் என்னை உள்ளே விட மறுக்கின்றனர். எனது சகோதரர் தீபக்கிடமும் தகவல் தெரிவிக்கவில்லை. நான் போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அப்படியிருந்தும், என்னிடம் தகவல் தெரிவிக்காமல் ஐடி ரெய்டு நடக்கிறது. இதற்காகவே வருமான வரித்துறைக்கு எதிராக நான் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன்.
ஜெயலலிதாவுக்கும் முறைகேடுகளில் தொடர்பு இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்க சசிகலா கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த ஐடி ரெய்டுக்கு துணையாக இருந்துள்ளனர். இவ்வாறு தீபா தெரிவித்தார்.