'எனக்கு சுகேஷ் சந்திரா யார் என்றே தெரியாது' - அலட்டாமல் கூறும் தினகரன் - வீடியோ
தேர்தல் ஆணையம் முடக்கி வைத்திருக்கும் இரட்டை இலையை மீட்பதற்கு, லஞ்சம் கொடுத்த வழக்கில், செய்தியாளர்களிடம் 'எனக்கு சுகேஷ் சந்திரா யார் என்றே தெரியாது' என அலட்டாமல் கூறினார் தினகரன்.
சென்னை: 'நான் சுகேஷ் சந்திராவிடம் பேசினேனா? அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது' என இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் செய்தியாளர்களின் கேள்விக்கு அலட்டாமல் பதில் சொன்னார் தினகரன்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் பதவி வகித்தார். ஆனால் சசிகலா குடும்பத்தார் கொடுத்த நெருக்கடியால் பதவியை ராஜினாமா செய்தேன் என அவர் கூறினார். அன்றிலிருந்து அதிமுக சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது.
அதன்பிறகு ஆர்கே நகர் தேர்தலில் சின்னம் யாருக்கு என இருதரப்பும் போட்டி போட, இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்நிலையில், அந்த சின்னத்தை மீட்பது குறித்தான விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதன் முடிவில் விரைவில் இரட்டை இலை யாருக்கு என்பது தெரிய வரும். இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என இடைத்தரகர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்துள்ளார்.
இந்த லஞ்சப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்திரசேகர், டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா ஆகியோரிடம் லஞ்சம் கொடுத்ததாக தினகரன் மீது டெல்லி குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் தினகரனிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், சுகேஷ் சந்திரா யார் என்றே எனக்குத் தெரியாது. நான் அவரிடம் பேசினேனா? என பத்திரிகையாளர்களிடமே கேள்வி கேட்டார். மேலும் 'இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன்' என கூறினார்.