முதல்வர், பிரதமர் பதவி எனக்கு கால் தூசு.. 3 மாதத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை: மு.க. அழகிரி
மதுரை: தமக்கு பதவி என்பது கால் தூசுக்கு சமம்.. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 3 மாதத்தில் அறிவிப்பேன் என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று முன்னாள் மேயர் தேன்மொழி கோபிநாதன் மகன் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழகிரி பேசியதாவது:
முதல்வர் பதவியோ, பிரதமர் பதவியோ என் கால் தூசுக்கு சமம். என் தொண்டர்கள் என்னோடு இருக்கும் பதவி மட்டும் போதும் எனக்கு. நான் தலைவர் பதவிக்கோ, வேறு பதவிக்கோ ஆசை பட்டது கிடையாது. என்னை கருணாநிதி தான் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஆக்கினார்.
தென் மாவட்டங்களில் நடந்த இடைத்தேர்தல்களில் வெற்றியை தேடி தந்ததால் என்னை மதுரை எம்பியாக போட்டியிடச் சொல்லி கருணாநிதிதான் அறிவித்தார். நானும் எம்.பி.,யாகி மதுரை மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன்.
எனக்கு பதவி வேண்டும் என்று கேட்டதில்லை. என்னோடு இருப்வர்களுக்கு பதவி வாங்கித் தருவது எனது கடமை.
நான் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பதாக இங்கு கோபிநாதன் குறிப்பிட்டார். தற்போது, நான் அமைதியாக இருக்கிறேன் என்று யாரும் கருதிவிட வேண்டாம். இன்னும் 3 மாதத்தில் எனது திட்டத்தை அறிவிப்பேன். அப்போது என் முடிவு தெளிவாக இருக்கும்.
இவ்வாறு மு.க. அழகிரி தெரிவித்தார்.