மத்திய அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை: சொல்வது அன்புமணி ராமதாஸ்
சென்னை: மத்திய அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்றும், தமிழக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாகவும் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்வதாகவும் அந்த கூட்டணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெறும் என்று தகவல் வெளியானது. கூட்டணியில் தேமுதிகவுக்கு 113 தொகுதிகளும், பாமகவுக்கு 70 தொகுதிகளும், பாஜகவுக்கு 51 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தகவலை தேமுதிக மறுக்கவில்லை. ஆனால் பாமக சார்பில் அதன் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
கூட்டணி
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லை. யாரிடமும் பேரம் பேசி தொகுதியை கேட்டு வாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சி தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.
பாஜக
பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை. வேண்டும் என்றால் பாஜக எங்கள் கட்சி தலைமையிலான கூட்டணியில் சேரட்டும். ஆனால் தொகுதி பங்கீடு குறித்து நாங்கள் தான் தீர்மானிப்போம்.
மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை. தமிழக அரசியலில் தான் கவனம் செலுத்துவேன். தமிழக சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்.(பாஜக தலைவர் அமித் ஷா அன்புமணிக்கு மத்திய கேபினட் அமைச்சர் பதவி அளித்து தங்கள் கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.)
திமுக, அதிமுக
60 ஆண்டு கால அனுபவம் உள்ள திமுகவும், 40 ஆண்டு கால அனுபவம் உள்ள அதிமுகவும் தேர்தலில் தனித்து போட்டியிட அஞ்சுகின்றன. ஆனால் தேர்தலை தனியாக சந்திக்கும் துணிச்சல் பாமகவுக்கு உள்ளது.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் அந்த பதவிக்கான கடமையை செய்ய தவறிவிட்டார். அவர் சட்டசபைக்கு செல்வது இல்லை.
தவறு
நாங்கள் நீண்ட கால திட்டம் வைத்துள்ளோம். தமிழகத்தை மேம்படுத்த நாங்கள் வகுத்துள்ள திட்டங்கள் இந்த ஒரு தேர்தலை மனதில் வைத்து செய்தது இல்லை. சில தொகுதிகளுக்காக திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தான் நாங்கள் செய்த ஒரே தவறு. அந்த தவறை உணர்ந்துவிட்டோம்.
தனித்துப் போட்டி
20 ஆண்டுகளுக்கு முன்பே பாமக தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணி வைக்காமல் தொடர்ந்து தனித்து போட்டியிட்டிருந்தால் இந்நேரம் பாமக திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தியாக ஆகியிருக்கும்.