எனக்கு சம்பள உயர்வு வேண்டாம்.. திமுகவை தொடர்ந்து தினகரனும் அறிவிப்பு!
தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என் ஆர்கே நகர் எம்எல்ஏவான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என் ஆர்கே நகர் எம்எல்ஏவான டிடிவி தினகரன் சட்டசபை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எம்எல்ஏக்களுக்கான ஊதியத்தை இருமடங்காக உயர்த்தியது. இதற்கு அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.
எம்எல்ஏக்களை தக்க வைக்கவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊதியத்தை உயர்த்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் அண்மையில் நிலுவைத் தொகையை வழங்கக்கோரியும் ஊதிய உயர்வு கோரியும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேண்டாம் என்ற திமுக
அப்போது போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனை தீரும் வரை திமுக எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
முதல்வர் நிவாரண நிதிக்கு
எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் பாதிக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
தினகரன் அறிவிப்பு
இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் தனக்கு வேண்டாம் என சட்டசபை செயலாளரிடம் ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான தினகரன் கடிதம் எழுதியுள்ளார்.
நிதி பிரச்சனை
தமிழக அரசில் நிதி பிரச்சினை நிலவும் நிலையில் ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் தினகரன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தினகரன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக சட்டசபைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.