கட்சியில் இருந்து நீக்கியபோது துடித்துவிட்டேன்.. மிகவும் வருந்தினேன்.. அழகிரி உருக்கம்!!
கட்சியில் இருந்து தன்னை நீக்கிய போது மிகவும் வருந்தியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார் அழகிரி
சென்னை: கட்சியில் இருந்து தன்னை நீக்கிய போது மிகவும் வருந்தியதாக அழகிரி உருக்கமாக தெரிவித்துள்ளார்
2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி. கருணாநிதி மறைவுக்கு பிறகு தன்னை திமுகவில் சேர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்தார்.
ஆனால் ஸ்டாலின் அதுகுறித்து இதுவரை வாய்திறக்கவே இல்லை. அதற்கான அறிகுறியும் கட்சியில் தெரியவில்லை.
வருந்தினேன்
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அழகிரி தனது சிறுவயது நினைவுகளையும் மனக்குமுறல்களையும் கொட்டித் தீர்த்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த அழகிரி,
ரொம்ப கஷ்டமாக இருந்தது. நாம் எந்த தப்பும் பண்ணவில்லையே என்று வருந்தினேன்.
ஆதாரங்களை காட்டினேன்
தொண்டர்களுக்காக பாடுபாட்டேன். சில குறைகளை கூறினேன். சில ஆதாரங்களை எடுத்துச்சென்று காட்டினேன். அதனால் அவருக்கு என்னை நீக்க வேண்டும் என்ற எண்ணமே கிடையாது. பொதுச்செயலாளருக்கு கூட அந்த எண்ணம் கிடையாது.
ஜெயலலிதா இருக்கும்போதே
என்னை கட்சியில் இருந்து நீக்கியதில் பல சதிகள் இருக்கிறது. சில பேருக்கு நான் வளர்ந்து விடப்போகிறேனோ என்ற எண்ணம் இருந்தது. ஜெயலலிதா இருக்கும்போதே நான் எதிர்த்து பல வெற்றிகளை பெற்றவன். என் மீது, எனது மனைவி, மகன் மீது பல வழக்குகளை தொடுத்தனர்.
சேர்த்துக்கொள்கிறேன் என்றார்
நான் வளர்ந்துவிடப்போகிறேன் என பயந்து தந்தையிடம் பேசி, மிரட்டும் தொணியில் ஈடுபட்டு பலரும் சேர்ந்து என்னை நீக்கச்செய்யுமாறு சதி செய்துவிட்டனர். எனது தந்தையை 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேரில் சந்தித்து கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்ளுமாறு கேட்டேன். அவர் கொஞ்ச நாள் அமைதியாய் இருப்பா. மீண்டும் சேர்த்துக்கொள்கிறேன் எனக்கூறினார்.
குணமடையட்டும் என காத்திருந்தேன்
அதன்பின்னர் அவர் உடல்நிலை மோசமடைந்துவிட்டது. அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த சமயத்தில் கட்சியில் சேர்க்குமாறு கேட்டால் தொல்லையாக இருக்கும் என, உடல்நிலை குணமடையட்டும் என காத்திருந்தேன். ஆனால் அவர் கட்சியில் சேர்க்க வேண்டும் என நினைத்திருக்கலாம்.
போகப் போக தெரியும்
கடந்த 4 வருடங்களாக கலைஞர் இருந்தார். அதனால் நான் அவருக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ எதையும் செய்யாமல் இருந்தேன். இருப்பினும் எனக்கு ஆதரவு குறைந்துவிட்டதா? இல்லையா? என்பது போகப்போக தெரியும். இவ்வாறு கூறினார் அழகிரி.