அத்தையின் சொத்து பத்தெல்லாம் வேணாங்க.. அவரது அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரமே போதும்.... தீபா
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரம் கிடைத்தால் மட்டும் போதுமானது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.
சென்னை: ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரம் கிடைத்தால் மட்டும் எனக்கு போதுமானது என்று தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவரது அண்ணன் மகள் தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். அதிமுகவை மீட்பதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடவைத்து தீபாவை முதல்வராக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவரது கணவன் மாதவன் சூளுரைத்தார். ஆனால் அதற்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
கணவர்- மனைவி சண்டை
இதனிடையே கணவர்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சியை தொடங்கினார். இது பேரவை நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இத்தனை நாள்களாக அவ்வப்போது தீபா தலைகாட்டி வந்தார்.
தினகரன் மீது விமர்சனம்
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த தினகரனை கதீபா கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் எல்லாம் மக்குசாமிகள் என்றும் விமர்சித்தார்.
போயஸ் தோட்டத்துக்கு வருகை
இதனிடையே தினகரன் மீது விமர்சித்த தீபாவை காவல் ஆய்வாளர் ஒருவர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதால் கடுப்பாகிவிட்டார் தீபா. இதைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டனுக்கு சென்றார். அது தமக்கு மட்டுமே சொந்தம் என்று வாதாடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தீபா பேட்டி
இதுகுறித்து தீபா பேட்டி அளிக்கையில், ஜெயலலிதாவின் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு வேண்டியதெல்லாம் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு நான்தான் என்ற அங்கீகாரம் மட்டுமே போதுமானது.
அத்தையின் படத்துக்கு மாலை
தீபக் என்னை தொடர்பு கொண்டு கார்டனில் உள்ள அத்தையின் படத்துக்கு மாலை அணிவித்து விட்டு செல்வதற்காக வருமாறு கூறினார். முதலில் என்னை மட்டும் தான் வர சொன்னார். நான்தான் பாதுகாப்பாக இருக்கட்டுமே என்று பேரவை நிர்வாகி ராஜா உள்ளிட்டோருடன் சென்றேன்.
திமிராக பேசினான்
என்னை ஒரு இடத்தில் உட்காருமாறு தீபக் திமிராக பேசினார். எதற்கு என்று கேட்டதற்கு உனக்கு எந்த வேலையும் இல்லை உட்காரு என்றான். இது எனக்கு எரிச்சலை ஊட்டியது. என்னை திட்டமிட்டு தாக்கினான் என்றார்.