பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை- ஆளுநர்
பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை நான் இதுவரை பார்த்ததில்லை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை என்றும் எனது பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட வர முடியாது என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியர் நிர்மலா தேவி , மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஒரு பேராசிரியர் இப்படி பேசியது பெற்றோர் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை அருப்புக்கோட்டை காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டி ராஜ்பவனில் செய்தியாளர்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக ஆளுநராக 6 மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டது. மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்திய சம்பவம் கண்டனத்துக்குரியது. நிர்மலா தேவி மீதும் அவர் பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிர்மலா தேவி அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. சந்தானம் தலைமையிலான குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும். அவர் ஒரு நேர்மையான அதிகாரி. கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் ஒரு மாதம் தாமதித்தது ஏன் என்பது விசாரிக்க வேண்டும்.
என்னை கேட்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் விசாரணைக்காக 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. நிர்மலா தேவியின் விவகாரம் குறித்து துணைவேந்தருக்கும் இந்த விவகாரம் தெரிவிக்கப்படவில்லை.
நிர்மலா தேவியின் முகத்தை கூட நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. என் பாதுகாவலர்களை தாண்டி ஒரு பறவை கூட என்னை நெருங்க முடியாது. சிபிஐ விசாரணைக்கு அவசியமில்லை. எனக்கு 70 வயது ஆகிறது, எனக்கு பேத்தி அல்ல, கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். எனவே உங்கள் வாயால் என்னை குற்றம்சாட்டாதீர்.
குற்றச்சாட்டு உறுதி செய்யும் பட்சத்தில் யார் குற்றவாளியாக இருந்தாலும் தண்டிக்கப்படுவர். பேராசிரியை விவகாரத்தில் காவல் துறை விசாரணை தொடரும் என்றார் ஆளுநர்.