நோட்டீஸ் வந்தால் ஜெ. ஜாமீன் மனு விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவேன்: பவானி சிங்
சென்னை: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்தால் நிச்சயம் ஆஜராவேன் என வழக்கறிஞர் பவானி சிங் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜரானார். இதையடுத்து அவர் ஜெயலலிதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதும் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரானார். முதலில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அவர் பின்னர் தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறினார். கர்நாடக உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததையடுத்து ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்நிலையில் ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வருகையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் இருக்கக் கூடாது என்று கூறி தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து பவானி சிங் கூறுகையில்,
சொத்துக்குவிப்பு வழக்கில் என்னை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமித்தனர். அதனால் நான் இது தொடர்பான வழக்குகளில் ஆஜரானேன். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் ஆஜரானேன். தற்போது எதிர்தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனு வரும் 17ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த வழக்கிலும் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் இன்று மாலைக்குள் நோட்டீஸ் அனுப்பினால் நிச்சயம் ஆஜராவேன். என்னை மாற்றக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது பற்றி எனக்கு கவலை இல்லை. நான் என் பணியை செய்கிறேன் என்றார்.