செயலாளர்கள் மாற்றம் ஏன்?.. எடப்பாடியின் டெல்லி லாபிக்காக சிவதாஸ் மீனா மாற்றமா?
சென்னை: மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா மாற்றப்பட்டிருந்தாலும் கூட முதல்வர் எடப்பாடியின் டெல்லி லாபியில் முக்கியப் பங்காற்றுவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவருக்கு 4 செயலாளர்கள் இருந்தனர். அவரது மறைவுக்குப் பின்னர் முதல் செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெங்கட்ரமணன் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
நான்காவது செயலராக இருந்த ராமலிங்கம் வேறுதுறைக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர் முதல்வருக்கான முதலாவது, நான்காவது செயலர் பதவிகள் நிரப்பப்படாமலே இருந்தது.
32 துறைகள் பகிர்ந்தளிப்பு
இரண்டாவது செயலராக இருந்த சிவ்தாஸ் மீனா, மூன்றாவது செயலர் விஜயகுமார் ஆகியோரிடம் அரசின் 32 துறைகளும் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அண்மையில் சிவ்தாஸ் மீனா மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
நீடித்த சிவ்தாஸ் மீனா
ஆனால் சட்டசபை கூட்டத்துக்குப் பின்னர் அனுப்பி வைப்பதாக டெல்லியிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார். இதனால் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட பின்னரும் தமிழக அரசிலேயே சிவ்தாஸ் மீனா நீடித்து வந்தார்.
புதிய செயலர்கள் நியமனம்
இந்நிலையில் சிவ்தாஸ் மீனா பணியிடத்துக்கு மூன்றாவது செயலர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு நிதித்துறை செலவினங்களை கவனித்து வந்த செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மைதிலி ராஜேந்திரன்
சிவ்தாஸ் மீனாவிடம் கூடுதல் பொறுப்பாக இருந்த பொதுத்துறை முதன்மைச் செயலர் பதவிக்கு மைதிலி ராஜேந்திரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் முதல்வருக்கான முதலாவது, நான்காவது செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இந்த இரு பதவிகளைக் கைப்பற்ற ஐஏஎஸ் அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே சிவ்தாஸ் மீனா மத்திய அரசுப் பணிக்கு சென்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான லாபியில் முக்கிய பங்கு வகிப்பார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.