தீவிர அரசியலில் கருணாநிதி இருந்தால்... அதிமுக ஆட்சி என்றோ கவிழ்ந்திருக்கும்... விஜயகாந்த் சரவெடி
திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக அதிமுக ஆட்சியைக் கவிழ்த்திருப்பார் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மட்டும் அரசியலில் தீவிர செயல்பாட்டில் இருந்திருந்தால் அதிமுக அரசை என்றோ கவிழ்த்திருப்பார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில் பல்வேறு வகையான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் . அப்போது, " தமிழக அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் தி.மு.க. முக்கியத்துவம் கொடுத்து செயல்படவில்லை என்று கூறுகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு தெளிவாகப் பதிலளித்துள்ள விஜயகாந்த், " இந்த அரசு தானாகவே கவிழ்ந்து விடும். சட்டசபையில் தி.மு.க.வினர் சபாநாயகரைத் தாக்க முயன்றனர். அவரைத் தாக்கி என்ன ஆகப்போகிறது. தி.மு.க.விடம் 89 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் எதையும் செய்ய முடியவில்லை.
கருணாநிதி செயல்பாட்டில் இருந்தால்..
சொல்லப்போனால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் என 100 எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் கையில் இருக்கிறார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி மட்டும் இப்போது தீவிர அரசியலில் இருந்திருந்தால் அவர் சிறப்பாக செயல்பட்டு எதையாவது செய்திருப்பார்.
ஸ்டாலின் செயல்படாத தலைவர்
அவர் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் தி.மு.க.வுக்கு ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக மட்டுமே இருக்கிறார். இன்னும் அவர் தலைவராக வரவில்லை. அவர் செயல்படாத தலைவராக இருக்கிறார்.
எம்ஜிஆருக்கு கூடும் கூட்டம்
தினமும் எங்காவது செல்கிறார். அங்குக் கூட்டம் கூட வேண்டும் என்று விரும்புகிறார். கருணாநிதியும் இதைத்தான் செய்தார். அவருக்குக் கூட்டம் கூடும். ஆனால் ஓட்டு எம்.ஜி.ஆருக்கு சென்றுவிடும்." என்று கூறியுள்ளார்.
மக்களைப் பற்றி அரசுக்குக் கவலையில்லை
மேலும், " தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிரடியாகப் பதில் அளித்துள்ளார் விஜயகாந்த். அதில், தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது. எங்குப் பார்த்தாலும் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியைத் தக்க வைப்பது பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் நடப்பது பற்றியோ, மக்களைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை.
ஜெ. நினைவிடம் என்ன போதி மரமா?
ஓ. பன்னீர்செல்வம் ஒரு முனிவர் போல பேசுகிறார். அவர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து உறுதிமொழி எடுத்திருக்கிறார். அது என்ன புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா?
ஓபிஎஸ்ஸால் முடியாது
ஸ்டாலினாலோ, ஓ. பன்னீர்செல்வத்தினாலோ இந்த அரசை வீழ்த்த முடியாது. கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இதைச் செய்திருப்பார்." என்று தெரிவித்துள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.