தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால் எடப்பாடி நாற்காலி ஆட்டம் கண்டுவிடும்... டிடிவி தினகரன் மிரட்டல்
தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை இழப்பார் என்று டிடிவி தினகரன் அதிரடியாக மிரட்டல் விடுத்தார்.
தஞ்சாவூர்: தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி அதிமுக லெட்டர் ஹெட்டை பயன்படுத்துவதை தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தால் போதும் எடப்பாடியின் முதல்வர் பதவி பறிபோய்விடும் என்று டிடிவி தினகரன் மிரட்டல் விடுத்தார்.
தம்மை எடப்பாடி கோஷ்டி நீக்கியது தொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அதிமுகவின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவானது இன்று வரை பின்பற்ற வேண்டும். அதுதான் விதி.
விதிமீறல்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியுள்ளனர். அதிமுக அம்மா என்ற லெட்டர் பேடுக்கு பதிலாக அதிமுக என்ற லெட்டர் பேடில் இன்று எனக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றி அதிலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கையெழுத்திட்டனர்.
இதுகூட தெரியலை
தேர்தல் ஆணையத்தின் விதிகள் கூட தெரியாமல் அவசர கோலத்தில் எனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அதிமுக லெட்டர் பேடை பயன்படுத்தியுள்ளனர். மேலும் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலும் என்னை துணை பொதுச் செயலாளர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
பதவி பறிபோகும்
இந்த தேர்தல் ஆணைய விதிமுறை மீறல் குறித்து யாரேனும் புகார் அளித்தால் முதல்வரின் பதவி பறிபோகும். அதுமட்டுமல்லாது, தீர்மானத்தில் கையெழுத்திட்ட அனைவரின் பதவிகளும் பறிபோகும்.
மடியில் கனம்
மடியில் கனம் இருப்பவர்கள்தான் இப்படி முடிவெடுத்துள்ளனர். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல இருக்கிறேன். இவ்வாறு தினகரன் கூறினார்.