இயற்கைச் சூழலில் அமைந்துள்ள கொடைக்கானல் கோல்ஃப் மைதானம்.. சிறந்த வீரர்களை உருவாக்குமா?
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் இயற்கையான முறையில் அமைக்கப்பட்ட கொடைக்கானல் கோல்ஃப் மைதானம் சிறந்த தமிழக கோல்ஃப் வீரர்களை உருவாக்க தயாராகியுள்ளது.
கொடைக்கானல்: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கொடைக்கானலில் நாட்டிலேயே முதல் முறையாக, இயற்கை சூழலுடன் கூடிய ஆர்கானிக் கோல்ஃப் மைதானத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இதற்காக, பழனி மலைக் குன்றுகளில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள கொடைக்கானலில், 100 ஏக்கர் பரப்பளவில், கொடைக்கானல் கோல்ஃப் கிளப், புதிய மைதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளுக்கு, ஐஎம்ஓ எனப்படும் மார்க்கெட் ஈகோலஜி இன்ஸ்டிடியூட் அங்கீகாரம் அளித்துள்ளது.
18 துளைகளை கொண்ட, கோல்ஃப் மைதானம் முழுவதும் இயற்கையாக வளர்க்கப்பட்ட புற்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் நீராதாரங்களை கொண்டதாக, வடிவமைக்கப்பட்டுள்ளதாக, கொடைக்கானல் கிளப் செயலாளர் ஜிஎஸ் மணி தெரிவித்துள்ளார்.
இதன்மூலமாக, கோல்ஃப் விளையாட்டுகளை நடத்துவதோடு, விவசாயத்திற்குத் தேவையான உரங்களை இயற்கை முறையில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, ஜிஎஸ் மணி கூறுகிறார்.
பயோடயானமிக் எனப்படும் இந்த முறையை பயன்படுத்தி, உலக அளவில் 50க்கும் அதிகமான நாடுகளில் கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள் செயல்படுவதாகவும், இந்தியாவில் முதல்முறையாக, இத்தகைய முயற்சியை தங்களது கிளப் செய்துள்ளதாகவும் கொடைக்கானல் கோல்ஃப் கிளப் செயலாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக, கோல்ஃப் மைதானங்களை பராமரிக்க, தண்ணீர் அதிகப்படியாக செலவாகும். அதனைச் சமாளிக்கவே, இத்தகைய புதிய முயற்சியை கொண்டு வந்துள்ளோம். கோல்ஃப் மைதானத்தில் ஆங்காங்கே, நீர் சேமிப்புக் குட்டைகள் இருக்கும் என்றும், அதில் மழை நீர் உள்ளிட்டவற்றை சேகரித்து, சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.