சீனப் பட்டாசை வாங்கினாலும், வெடித்தாலும் சட்டவிரோதம்.. மத்திய அரசு எச்சரிக்கை!
சென்னை: இந்தியச் சந்தையை நாசப்படுத்தி வரும் சட்டவிரோத சீனப் பட்டாசுகளின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், யாரும் அதை வாங்கக் கூடாது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதனால் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு பெருமளவில் உள்ளூர் பட்டாசுகளையே நம்பியிருக்கும் நிலை ஏற்படும். இதனால் பட்டாசு விலையும் உயரக் கூடும் என்று தெரிகிறது.
சட்டவிரோதமான வகையில் சீனப் பட்டாசுகளை யாராவது இறக்குமதி செய்தால், விற்றால், பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இந்திய சந்தையில் வெளிநாட்டு பட்டாசுகளை குறிப்பாக சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பதற்கு அனுமதி தரப்படவில்லை என்றும், எனவே சீனப் பட்டாசுகளை யாராவது விற்றால் அது சட்டவிரோதம் என்றும் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டவிரோத சீனப் பட்டாசு இறக்குமதியை நாங்கள் தடை செய்துள்ளோம். அதற்கு அனுமதி கிடையாது. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து வாங்கி விற்கக் கூடாது என்று அறிவிப்பும், அறிவிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி யாராவது செய்தால் அது சட்டவிரோதமாகும். எனவே யாராவது அதை விற்றால் கடும் தண்டனைக்குள்ளாவார்கள்.
இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுந்துள்ளது. என்ன மாதிரியான சட்டத்தின் கீழ் தவறு செய்வோர் தண்டிக்கப்படுவார்கள் என்பது குறித்து விளம்பரப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனப் பட்டாசு என்பது தடை செய்யப்பட்டது. எனவே அதை யாராவது விற்றாலோ அல்லது வெடித்தாலோ அது சட்டவிரோதமாகும் என்று மக்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் என்றார் நிர்மலா சீதாராமன்.