ஜாலியா 'செல்ஃபி' எடுக்கப் போய் ஜோலி முடியும் பட்டியலில் இந்தியா முதலிடம்!
செல்போன் பிரியர்களை வாட்டி எடுக்கும் செல்ஃபி மோகத்தால் நேரிடும் மரணங்களில் இந்தியாவில் தான் அதிக அளவிலான மரணங்கள் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : செல்போனும் கையுமாக சுத்தும் மக்களை அடிமைபடுத்தி இருக்கும் செல்ஃபி மோகத்தால் ஏற்படும் மரணங்கள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சியான ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
டிவி, மிக்சி, ஃபேன், பிரிட்ஜ் போல செல்போனும் இப்போது அன்றாட தேவைகளில் ஒன்றாகவே மாறிப் போய்விட்டது. ஒருவருக்கு ஒருவர் தகவல் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள், இன்று ஸ்மார்ட் போன் உலகில் அபரிதமான வளர்ச்சி பெற்று மினி லேப்டாப் போல அனைத்தையும் செல்போனிலேயே செய்துவிடலாம்.
மனிதர்களின் வசதிக்காக பயன்படும் தொழில்நுட்பம் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்தைத் தான் தரும் என்பதற்கு ஸ்மார்ட் ஃபோன்களே ஒரு உதாரணம். தனித்துவம், திரில் என்று தேடித் திரிபவர்களை கொல்லும் ப்ளூவேல் கேம் போல, செல்ஃபி மோகம் இன்று தவிர்க்க முடியாததாகவிட்டது. எங்கு போனாலும் அங்கு நின்று ஒரு செல்ஃபியை எடுத்து அதை வாட்ஸ் அப், பேஸ்புக்கில் போடுவது தான் ட்ரெண்ட்.
இந்தியா முதலிடம்
பொழுதுபோக்கிற்காக செல்லும் இடங்களில் விபரீதத்தைக் கூட உணராமல் தட்டி விடும் செல்ஃபிகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டின் நிலவரப்படி செல்ஃபி மரணங்களில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. மற்ற நாடுகள் ஒற்றை இலக்க எண்களிலேயே இருக்க இந்தியாவில் தான் இரட்டை இலக்க எண்ணில் அந்த எண்ணிக்கை உள்ளது.
ஆண்களே அதிகம்
2014 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில், செல்ஃபி எடுக்கும்போது 127 பேர் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 68 சதவீதம் பேர் 24 வயதிற்கு உட்பட்டவர்கள், மேலும் இவர்களில் 75.5 சதவீதம் பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அற்ப ஆயுளில் முடியும் செல்ஃபி மோகம்
இந்தியாவில் அதிக அளவாக, 2015 மார்ச் மாதத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மங்குரூர் ஏரியில் படகுபயணம் செய்துகொண்டிருந்தவர்கள் குரூப் செல்ஃபி எடுக்கையில் நேர்ந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாயினர். 2016 ஜூன் மாதம், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கங்கை நதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது குரூப் செல்ஃபி எடுக்க முற்பட்டு 7 பேர் பலியாயினர்.
இத்தனை போட்டோக்களா?
2015ம் ஆண்டில் மட்டும் கூகுள் போட்டோஸ் என்ற தளத்தில் 24 பில்லியன் செல்ஃபிக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்றைய நவநாகரீக உலகில், ஒருவர் தன் வாழ்நாளில் சராசரியாக 25,700 செல்பிக்கள் எடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
துன்பத்தை தேடுவது ஏன்?
தொழில்நுட்பங்கள் மனிதன் வாழ்வதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை. அதனை பயன்படுத்தி வாழ்வை மகிழ்வானதாக்குவதை விட்டுவிட்டு, வெறித்தனமாக பின்பற்றும் இளசுகளின் மோகம் இனியாவது தனியுமா. விழித்திடுங்கள் மக்களே!