”இரிடியம்” பேரால் ஏமாற்றிய கும்பல்- ஒட்டன்சத்திரத்தில் கைது
ஒட்டன்சத்திரம்: தமிழகத்தில் கைவரிசை காட்டிய இரிடியம் மோசடி கும்பலை கிராமத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் அடுத்த ஒட்டன்சத்திரம் தொப்பம்பட்டி ஒன்றியத்தை சேர்ந்தது கருமன்கிணறு கிராமம். இந்த ஊரை சேர்ந்த கனிமொழி என்பவரது வீட்டில் சிலர் சந்தேகத்திற்கிடமாக தங்கியிருந்துள்ளனர்.
இதுபற்றி அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கனிமொழி வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 6 பேரையும் பிடித்து கைகளை கட்டினர்.
இதற்கிடையே வீட்டின் உரிமையாளர் கனிமொழி உள்பட சிலர் பொதுமக்கள் பிடியில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிக்கியவர்களை தங்களிடம் ஒப்படைக்கும் படி கூறினர்.
அப்போது அப்பகுதி கிராமத்தினர் போலீசாரிடம் தப்பி சென்றவர்களையும் பிடித்தால்தான் 6 பேரையும் ஒப்படைப்போம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி ஜானகிராமன் தலைமையில் கூடுதல் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பிடிபட்ட ஆறு பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட கும்பல் சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரது தலைமையில் செயல்படும் "இரிடியம் மோசடி கும்பல்" என தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கும்பல் பெங்களூரை சேர்ந்த மேரி என்பவரிடம் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.10 லட்சத்தை வாங்கி ஏமாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலரை மோசடி செய்துள்ளதும், இதன் பின்னணியில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. தப்பி ஓடிய கனிமொழியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.