நோட்டா, வருமான வரி சோதனை.... குஜராத் ராஜ்யசபா தேர்தலில் அதிகார மையங்களை வைத்து மிரட்டும் பாஜக?
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலை தோற்கடிப்பதற்கான அனைத்து வேலைகளையும் அதிகார மையத்தை வைத்து கொண்டு பாஜக செய்யத் தொடங்கியுள்ளது.
சென்னை : குஜராத் ராஜ்யசபா தேர்தலையொட்டி அந்த மாநிலத்தில் நடக்கும் களேபரக்காட்சிகள் அதிகார மையத்தை வைத்துக் கொண்டு பாஜக காங்கிரஸ் கட்சியை மிரட்டிப் பார்க்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க, திரிணாமூல் காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி காலியான இடங்களுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி அந்த மாநில சட்டசபையில் தேர்தல் நடக்கிறது.
குதிரை பேரம் நடத்த முயற்சி
இந்த தேர்தலில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா. காங்கிரஸ் சார்பில், அஹமது படேல் என மூன்று பேர் போட்டியிடுகின்றனர். ராஜ்யசபா உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் என்பதால் எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும்.
வெற்றி உறுதி
ஏறத்தாழ பாஜக வேட்பாளர்கள் இருவரின் வெற்றி உறுதியாகியுள்ளது. பாஜக சார்பில் மூன்றாவது வேட்பாளராக பல்வந்த்சிங் ராஜ்புத் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் தான் பாஜகவில் ஐக்கியமானார். இவரை வெற்றி பெற செய்ய காங்கிரஸ் எம்எல்.ஏ.க்களை குதிரை பேரம் நடத்தி தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயற்சிக்கிறது.
கடத்தப்பட்ட எம்எல்ஏக்கள்
மேலும் கடந்த சில தினங்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடு்த்தடுத்து பா.ஜ.கவிற்கு ஓட்டம் பிடித்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்து வருவதால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.கவின் இந்த செயலை முறியடிக்கவே காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில் 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக பெங்களூரு கடத்தி செல்லப்பட்டனர்.
பெங்களூரு ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள்
அகமது படேலின் வெற்றிக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்கள் மேலும் பா.ஜ.விற்கு தாவாமல் இருக்க இரவோடு இரவாக பெங்களூரு கடத்திச் செல்லப்பட்டனர்.
கிடுக்குப்பிடி போடும் பாஜக
பெங்களூரு ஈகிள்டன் கால்ஃப் ரெசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் அந்த மாநிலத்தில் தங்க வைக்கப்பட்டால் சிக்கல் ஏற்படாது என்கிற ரீதியில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் பெங்களூரு ரிசார்ட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று கர்நாடக மாநில எரிசக்தித் துறை அமைச்சர் சிவக்குமார் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
'நோட்டா' அறிமுகம்
ஏற்கனவே குஜராத் ராஜ்யசபா தேர்தலில் முதல்முறையாக 'நோட்டா' அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற அம்சத்தை முதன்முறையாக தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி எம்எல்ஏக்கள் நோட்டாவிற்கு வாக்களித்தால் அவர்கள் மீது கட்சிக் கொறடா எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதும் காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை எதிர்த்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் புயலைக் கிளப்பி வருகிறது.
வெளியேற்றும் நடவடிக்கையா
இந்நிலையில் பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் மிரட்டும் ரீதியில் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இல்லாவிடில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை வெளியேற்றுவதற்காக அல்லது தப்பிக்க வைப்பதற்கான நடவடிக்கையாக கூட இது இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மிரட்டும் பாஜக
தேர்தல் ஆணையம் தனிப்பட்ட அமைப்பு என்றாலும் அண்மையில் தலைமை தேர்தல் ஆணையராக குஜராத்தை சேர்ந்த ஏ.கே.ஜோதி நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் குஜராத் தேர்தலில் தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை உள்ளிட்ட அதிகார மையங்களை வைத்து பாஜக எதிர்க்கட்சிகளை மிரட்டிப்பார்க்கிறது என்பதே காங்கிரஸ் கட்சியினரின் குற்றச்சாட்டாக உள்ளது.