கொலை வழக்கிலிருந்து ராமதாஸ் விடுதலை.. காங்கிரஸ் காரணமா
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில் இருந்து டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.
குறிப்பாக இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
இதற்குப் பலனாக, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுடன் பாமக கூட்டணி சேரலாம் என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
2006ல் நடந்த தேர்தல் கொலை
கடந்த 2006 ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் வாக்குப் பதிவு அன்று திண்டிவனத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் படுகொலை செய்யப்பட்டார்.
ராமதாஸ் குடும்பம் வழக்கில் சேர்ப்பு
இந்த கொலை வழக்கில், டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மருமகன் பரசுராமன், டாக்டர் ராமதாஸ் பேரன் மருத்துவர் பிரித்தீவன் உள்ளிட்ட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
செங்கல்பட்டு கோர்ட்டில்
இந்த கொலை வழக்கு செங்கல்பட்டு முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில், நடுவண் புலனாய்வுப் பிரிவு அதாவது சிபிஐ கடந்த டிசம்பர் 31 ம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
ராமதாஸ் மீது குற்றப்பத்திரிக்கை
அதில், டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மருமகன் பரசுராமன், டாக்டர் ராமதாஸ் பேரன் மருத்துவர் பிரித்தீவன் ஆகியோர் மீது பரபரப்பு குற்றம் சாட்டப்பட்டு, இந்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.
திடீர் விடுவிப்பு
இந்த நிலையில், டாக்டர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மருமகன் பரசுராமன், டாக்டர் ராமதாஸ் பேரன் மருத்துவர் பிரித்தீவன் ஆகியோர் குற்றம் செய்யவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து அவர்கள் பெயரை நீக்குவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கூறியதது.
ராமதாஸ் நிம்மதி அறிக்கை
இதனையடுத்து, டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், திண்டிவனத்தில் நடந்த கொலையில் எனக்கோ அல்லது எனது கட்சியினருக்கோ எந்த தொடர்பும் இல்லை. புனிதமான மருத்துவ தொழில் செய்பவனாக வாழ்க்கையைத் தொடங்கிய நான், யாருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை.
முள் மூட்டையை இறக்கி வைத்த உணர்வு
செய்யாத தவறுக்காக பெரும் பழியை நாங்கள் சுமந்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருப்பதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக சுமந்து வந்த முள்மூட்டையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது என்று டாக்டர் ராமதாஸ் உணர்சி வயப்பட்டு கூறினார்.
அரசியல் காரணமா
இந்த நிலையில் தான், இந்த விவகாரத்திற்கும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் இடையே ஒரு சம்பந்தம் உண்டு என்று அரசியல் வட்டாரத்தில் சிலர் அரசியல் வெடியை கொளுத்திப் போட்டுள்ளனர்.
காங்கிரஸ் பின்னணியா
ஏற்கனவே சிபிஐயை காங்கிரஸ் கட்சி தனக்குப் பிடித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், பிடிக்காதவர்களுக்கு இன்னொரு மாதிரியாகவும் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே ராமதாஸ் விடுதலையையும், இதில் இணைத்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.
கூட்டணிக்கு யாருமே இல்லாத நிலை
தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி சேர இதுவரை யாருமே ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகிறது. ஈழப் பிரச்சினை, ஊழல் புகார்கள், மக்களிடம் காங்கிரஸ் மீது நிலவும் கடும் எரிச்சல் ஆகிய காரணங்களுக்காக யாருமே காங்கிரஸை சேர்க்க முன்வராத நிலை காணப்படுகிறது.
பாஜகவின் சுறுசுறுப்பு
தமிழகத்தில் பாஜக கூட்டணி சேர்ப்பதில் படு விறுவிறுப்பாக உள்ளது. திமுகவே பார்த்து மிரளும் அளவுக்கு கட்சிகளை இழுத்து வருகிறது. ஏற்கனவே மதிமுக சேர்ந்து விட்டது. அடுத்து தேமுதிகவையும் இழுக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். பாமகவையும் இழுக்கப் பார்த்தனர். ஆனால் முடியாமல் போய் விட்டது.
பாமகவை இழுக்கும் முயற்சியா
இந்த நிலையில், பாமக நிறுவனர் மற்றும் குடும்பத்தினர் மீதான வழக்குகளை சிபிஐ விலக்கிக் கொள்ள காங்கிரஸ் காரணமாக இருக்கலாமோ என்ற எண்ணம் கிளம்பியுள்ளது.
ஏதுமில்லாததற்கு இது ஓ.கே.தானே...
கூட்டணியில் யாருமே இல்லை என்ற நிலைக்குப் பதில் பாமகவாவது இருக்கிறதே என்ற எண்ணத்தில் காங்கிரஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாமக -வுக்கு வட மாவட்டங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளது என்பதாலும் பாமகவை இழுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.