ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி.. சசிகலாவுக்கு உதவுகிறாரா தீபா?
சசிகலா தரப்பு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள் மோதுவதுதான் ஆர்.கே.நகரில் உண்மையான போட்டியாக இருக்க முடியும். தீபாவோ, ம.ந.கூவோ வாக்குகளை பிரித்தால் அது சசிகலா ஆதரவு அதிமுகவுக்கே வெற்றியை தேடி கொட
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 'எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை' சார்பாக போட்டியிட உள்ளதாக தீபா அறிவித்துள்ளதன் மூலம் அது சசிகலா தரப்பு அதிமுகவுக்கே சாதகமாக முடியும் என்று கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தீபா அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ் அணி ஆதரவு அளித்தாலும் ஏற்கத் தயார் என்றும், திமுக மற்றும் சசிகலா தரப்பை தவிர பிறர் வழங்கும் ஆதரவை ஏற்க தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முளைத்து மூனு இலை கூடவிடாத ஒரு அமைப்பு சார்பில், தீபா போட்டியிட உள்ளது சசிகலா தரப்பு அதிமுகவை வீழ்த்த உதவாது, அவர்கள் வெற்றிக்கே உதவும் என்பதே பொதுக் கருத்தாக உள்ளது.
காத்திருந்த பெண்கள்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டபோது மொத்த தமிழகமும் அதிர்ந்தது. குறிப்பாக பெண்கள். இதனால் சசிகலாவை எதிர்க்க யாராவது முன்வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் காத்திருந்தனர். ஒருவருமே முனக கூட முன்வரவில்லை என்றபோது திடீரென தோன்றிய தீபா அவர்களுக்கு பர தேவதையாக காட்சியளித்தார்.
ஜெயலலிதா போன்ற உருவம்
எப்படியாவது சசிகலா பிடியிலிருந்து கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஆவேசம் பெண்களிடம் இருந்தது. தீபாவின் உருவ ஒற்றுமை ஜெயலலிதாவை போல இருந்ததால், அந்த அம்மையாருக்கு நிகழ்ந்த கொடுமையை கண்டறிய தீபாவே சரியான நபர் என பெண்கள் நம்பினர். அரசியல் அனுபவமே இல்லாவிட்டாலும், ஜெயலலிதாவின் ரத்த வாரிசு என்பதால் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை என உருகினர். அதனால் அதிமுகவின் ஆண் தொண்டர்களும் கூட அவர் பின்னால் அணி வகுத்தனர்.
பன்னீர்செல்வம் உதயம்
இந்த நிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம் திடீரென சசிகலாவுக்கு எதிராக வெடித்து கிளம்பினார். சசிகலா பற்றி புட்டுபுட்டு வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றார். அவ்வளவுதான், ஜெயலலிதா ஆதரவு பெண்களும், தொண்டர்களும் அப்படியே பன்னீர்பக்கம் சாய்ந்தனர். அரசியல் அனுபவம் இல்லாத தீபாவை நம்புவது மண்குதிரையை நம்புவதை போன்றது என யோசித்த நடுநிலை வாக்காளர்களும், முதல்வர், அமைச்சர் என அனுபவம் கொண்ட ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவு அளிப்பது மேல் என முடிவுக்கு வந்தனர் என்பதே கள நிலவரம்.
வாக்குகள் பிரியும்
இப்போது தீபாவை தேடுவார் இல்லை. ஆனால் அவர் தனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு, ஏதோ ஒரு பெயரில் ஒரு அமைப்பையும் உருவாக்கிக்கொண்டுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் தீபா போட்டியிட்டால், அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரியும். ஒன்று திமுகவுக்கும் மற்றொரு சிறு பகுதி தீபா பக்கமும் போகலாம். இடைத்தேர்தல் என்பதால் ஒவ்வொரு வாக்குமே முக்கியமானது. இந்த நிலையில் தீபா பிரிக்கும் சிறு வாக்குகள் கூட சசிகலா தரப்பு அதிமுகவின் தோல்வியை தவிர்க்க உதவக்கூடும்.
சிதறாமல் வாக்குகள் வேண்டுமே
மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை ஆளும் கட்சிக்கு உணர்த்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்தான் ஒரு அரிய வாய்ப்பு. எனவே, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூட போட்டியிலிருந்து விலகியிருக்க விரும்புவர் என தெரிகிறது. அதிமுகவை முழுதாக கைப்பற்றுவதிலேயே அவர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே சசிகலா தரப்பு அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள் மோதுவதுதான் ஆர்.கே.நகரில் உண்மையான போட்டியாக இருக்க முடியும். தீபாவோ, ம.ந.கூவோ வாக்குகளை பிரித்தால் அது சசிகலா ஆதரவு அதிமுகவுக்கே வெற்றியை தேடி கொடுக்கும். தேர்தலில் போட்டியிட தகுகுதியுடைய அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது என்பதே நடைமுறை என்றபோதிலும், தார்மீக அடிப்படையில் வாக்குகள் சிதறாமல் காப்பதே எதிர்க்கட்சிகளின் இப்போதைய பணியாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.