நீதிபதி ரகுபதி என்ன சூப்பர் ஹீரோவா?: கொந்தளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!
சென்னை மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். இது குறித்து தமிழக அரசு முன்னாள் நீதிபதி ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷனை நியமித்துள்ளது.
ஆனால் திமுக பொருளாளர் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 4-ந் தேதி தலைமை நீதிபதி கவுல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது மு.க.ஸ்டாலின் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்தன், பரந்தாமன்ம் பிரசன்னா ஆகியோர் ஆஜராகினர். வழக்கறிஞர் வில்சன் இவர்களுக்காக வாதிட்டார்.
அப்போது ஸ்டாலின் தரப்பில், மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் நியாயமான விசாரணை நடைபெற சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆனால் தமிழக அரசு தரப்பில் ஆஜரான சோமயாஜியோ, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றார்.
இதற்கு பதிலடியாக திமுக தரப்பில், நீதிபதி ரகுபதி பல விசாரணை கமிஷன்களில் உறுப்பினராக இருக்கிறார். நுகர்வோர் நீதிமன்றம், குண்டர் தடுப்பு சட்ட அமைப்புகளில் இருக்கிறார் என்று சுட்டிக்காட்டினர்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் கூறியது:
- ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷன்கள் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளன.
- நுகர்வோர் தீர்ப்பாணையத் தலைவராகவும், குண்டர் தடுப்புச்சட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் நீதிபதி ரகுபதி இருக்கிறார்.
- மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கும் நீதிபதி ரகுபதியையே நியமிக்க வேண்டிய அவசியம் என்ன?
- ஏற்கெனவே பல பொறுப்புகளை வகித்து வரும் நிலையில் இதற்கும் ரகுபதியை நியமித்தது ஏன்?
- அப்படி என்ன ரகுபதி ஒரு சூப்பர் ஹீரோவா?
- இதுவரை ரகுபதியிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் என்ன?
- நீதிபதி ரகுபதி உறுப்பினராக உள்ள விசாரணை கமிஷன்கள், நுகர்வோர் தீர்ப்பாணையத்தில் அவர் முன் நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன?
- இதுகுறித்து நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
- இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.