சட்டசபை தேர்தலில் சசிகலா போட்டி? ஆன்மீக சுற்றுலா அதிகமாவதன் மர்மம்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டசபை தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாகவே, அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கி வெற்றிக்காக வேண்டுதல் வைத்து வருவதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சசிகலா, இந்த தேர்தலில் டெல்டா மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக மன்னார்குடி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதி, கடந்த 2001 முதல் தொடர்ந்து 15 ஆண்டுகள் அதிமுக வசம் உள்ளது. தற்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் இங்கு 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாக தொகுதி முழுக்க பேசிக் கொள்கிறார்கள்.
ஆன்மீக பயணம்
கடந்த ஜனவரி 20ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார் சசிகலா. இதையடுத்து கடந்த 11ம் தேதி மதுரை, பழனி என்று ஆன்மீக பயணம் மேற்கொண்டார்.
ஸ்ரீரங்கம் தரிசனம்
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீரங்கம், சமயபுரம், பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி, திருக்கோஷ்டியூர், நாமக்கல் ஆஞ்சநேயர் என கோவில் கோவிலாக ஏறி இறங்கியுள்ளார் சசிகலா.
அண்ணன் மகள் பிரபா
ஜெயா டிவி சி.இ.ஓவும் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளுமான பிரபாவதி சிவகுமார் சகிதமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் சென்ற சசிகலா, கருடத்தாழ்வார், அடுத்து மூலவர், தாயார் சன்னதிகளில் மகிழம்பூ, சந்தனமாலை, பழங்கள் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய பூஜை பொருட்கள் கொடுத்து மிக பக்தியோடு தரிசனம் செய்தனர்.
பூஜையில் வேட்பாளர் பட்டியல்
ஜெயலலிதா பெயரில் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது. கூடவே அதிகாலையில் ஜெயலலிதா பெயரில் விஸ்வரூப தரிசனம் பூஜை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு பச்சை கலர் பைகளை வைத்திருந்த பிரபாவதி, கோவிலுக்குள் செல்லும்போது மட்டும் ஆரஞ்சு கலர் கவரை கையோடு எடுத்துக்கொண்டு போனார். அந்த கவரில் அதிமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இருந்ததாகவும், ஜெயலலிதாவின் பெயரில் சிறப்பு பூஜை செய்த கையோடு அந்த கவரையும் வைத்து பூஜை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
ஜெ.வின் மகம் நட்சத்திரத்திற்கு பூஜை
திருக்கோஷ்டியூரில் ஜெயலலிதாவின் ஜென்ம நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. இதனையடுத்து வைரவன் பட்டி, பிள்ளையார்பட்டி கோவில்களுக்கு சென்று பூஜை செய்த சசிகலா, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலிலும் ஜெயலலிதா பெயருக்கு அர்ச்சனை செய்துள்ளார்.
ஒரத்தநாடு தொகுதியில் சசி
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குவது ஒருபுறம் இரூக்க, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் சசிகலா போட்டியிடப் போவதாகவும் கூறப்படுகிறது. ஒரத்தநாடு அதிமுகவுக்கு மிகவும் சாதகமான தொகுதி. அமைச்சர் வைத்திலிங்கம் தொகுதியை நன்றாகவே வைத்துள்ளார். சசிகலா இங்கே போட்டியிட்டால் வெற்றி உறுதி என்கின்றனர் அதிமுகவினர்.
அமைச்சர் வைத்திலிங்கம்
சசிகலாவின் சொந்த ஊர் மன்னார்குடி. கடந்த தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை சந்தித்த போதிலும் மன்னார்குடியில் வெற்றி பெற்றது. அதனால் மன்னார்குடியை அதிமுகவுக்கு பாதுகாப்பான தொகுதியாக கருத முடியாது என்றும் அதிமுகவினர் கூறுகின்றனர். ஒரத்தநாடு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவும் அமைச்சருமான வைத்திலிங்கத்துக்கு வேறு தொகுதி ஒதுக்கப்பட உள்ளதாகவும், அவர் தஞ்சாவூர் அல்லது பேராவூரணி தொகுதியில் போட்டியிடலாம் என்று பேசிக் கொள்கிறார்கள்.
நெருப்பில்லாம புகையுமா?
ஒரத்தநாடு மட்டுமல்ல, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி என சுற்றுவட்டார ஊர்களிலும் சசிகலா சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது பற்றியே பேச்சாக உள்ளதாம். நெருப்பில்லாம புகையுமா?