தினகரனைத் தொடர்ந்து சசிகலாவையும் விரட்டியடிக்க எடப்பாடி கோஷ்டி முடிவு?
டிடிவி தினகரனைத் தொடர்ந்து சசிகலாவையும் நீக்க எடப்பாடி அணி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: டிடிவி தினகரனைத் தொடர்ந்து சசிகலாவையும் நீக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. இன்று காலை அதிமுக தலைமை கழகத்துக்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தினகரனின் அறிவிப்புகள் செல்லாது என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை என்றும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்தான் கட்சியை வழி நடத்துவார்கள் என்றும் ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
27 பேரின் கையெழுத்து
இந்த தீர்மானத்தில் ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த 27 பேரின் கையெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
தூக்கியெறிவார்களா?
சசிகலாவால் நியமிக்கப்பட்ட செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் கையெழுத்து ஈபிஎஸ் அணியின் தீர்மானத்தில் இடம்பெறவில்லை. இதன் மூலம் சசிகலா அளித்த பதவியை செங்கோட்டையனும் திண்டுக்கல் சீனிவாசனும் தூக்கியெறிவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சசிகலாவையும் நீக்க முடிவு?
ஈபிஎஸ் அணியின் தீர்மானத்தின் மூலம் டிடிவி தினகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என நிரூபணமாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்க ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி செல்லாது
கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மட்டுமே கட்சிப்பதவியை வகிக்க முடியும். அதனடிப்படையில் சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவியும் செல்லாது என அறிவிக்க ஈபிஎஸ் அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி அறிவுறுத்தல்
அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என டெல்லி மேலிடம் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இரு அணிகள் இணைந்தால் மட்டுமே சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரிடமிருந்து கட்சியை காப்பாற்ற முடியும் என டெல்லி தலைமை அறிவுறுத்தியதால் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.