அரசியலுக்கு அதிரடியாக வருகிறாரா விஜய்?... மெர்சலில் "ஓபனிங்" அதுக்குத் தானா??
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மெர்சல் படத்தில் அவரது மாஸ் என்ட்ரி காட்சி.
சென்னை : அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ள மெர்சல் திரைப்படத்தில் நடிகர் விஜய் அறிமுகம் ஆகும் காட்சியே அரசியல் என்ட்ரி போல இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மெர்சல் நடிகர் விஜய் முதல்முறையாக 3 வேடத்தில் நடித்த படம் மட்டுமல்ல, அரசியலுக்கு தான் வரப்போவதன் சமிக்ஞையாகவே அரசின் சலுகைகள், வரிவிதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை மையமாக வைத்தே பஞ்ச் டயலாக்குகள் எழுதப்பட்டுள்ளன. இது வரை காதல் ஹீரோவாக டூயட் காமெடி என்று நடித்து வந்த விஜய் இந்தப் படத்தில் சமுதாய அக்கறை கொண்ட நபராக காட்டப்பட்டுள்ளார்.
3 கதாபாத்திரங்களிலுமே மக்கள் பிரச்னைக்காக பாடுபடும் தலைவனாகவே விஜயின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. அப்பா கேரக்டரில் வரும் விஜய் கிராமத்து மக்களின் நலனுக்காக மருத்துவமனை கட்டுகிறார். மகன் விஜய் மருத்துவராகி 5 ரூபாயில் மக்களுக்கு மருத்துவ சேவை செய்கிறார். மற்றொரு மகன் கேரக்டரில் விஜய் மருத்துவத் துறையை வணிக நோக்கத்தில் பார்ப்பவர்களை கடத்தி கொல்கிறார்.

மாஸ் என்ட்ரி
ஆக 3 கதாபாத்திரங்களிலுமே விஜய் மக்களுக்காக செயல்படுவது போலவே கதை நகர்கிறது. இதே போன்று மெர்சல் என்ட்ரியில் விஜயின் அறிமுக காட்சியும், விஜயை கைது செய்து போலீசார் அழைத்து செல்லும் போது மக்கள் கதறுவது, இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சிப்பது என மக்கள் அன்பை பெற்ற நாயகனாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

நேரடி விமர்சனம்
விஜய் இதுவரையில் அமைதியான முறையில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்தார். ஆனால் இந்தப் படத்தில் இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கும் அரசால் மருத்துவத்தை இலவசமாகத் தர முடியவில்லை, ஓட்டுக்கு மக்களுக்கு பணம் கொடுப்பது என பஞ்ச் டயலாக்குகள் அரசையும் அரசியல்வாதிகளையும் நேரடியாக சாடுகின்றன.

மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில்
மருத்துப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சாராயத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்றும், அரசு மருத்துவமனைகளில் வசதிகள் குறைபாடுகள் குறித்தும் வசனங்களில் அடித்து துவம்சம் செய்கிறார். ஏ.எல். விஜயின் தலைவா படத்தில் மும்பை தாதா மகனாக வந்து மக்களுக்கு நல்லது செய்யும் ஹீரோவாக வந்த விஜய், மெர்சல் படத்தில் முழுக்க முழுக்க மக்கள் பிரச்னையான மருத்துவம் வணிகமாவதை கையில் எடுத்து செயல்பட்டிருக்கிறார்.

ரசிகர்கள் குஷி
மெர்சலில் விஜய் என்ட்ரி, பஞ்ச் டயலாக் உள்ளிட்டவற்றை பார்த்து குஷியாகிப் போயுள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய் அரசியலுக்கு வரப்போகிறார், என்றும் அதற்கான பணிகளை விஜயின் தந்தை சந்திரசேகர் தொடங்கியுள்ளதாகவம் ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு கிசுகிசுப்பும் உள்ளது.

அரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவ, பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தொடர்ந்த மக்கள் பிரச்னையில் தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டு வருகிறார் விஜய். நீட் விவகாரத்திலும் மருத்துவ இடம் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதா வீட்டிற்கு நேரடியாக சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னதோடு, நிதியுதவியும் செய்தார். எனவே அரசியலில் முதலில் ரஜினியா, கமலா என்ற சுழற்சியில் விஜய்யும் இணைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications