கடல் வழியே ஊடுருவி சென்னையை தாக்க நோட்டமிட்ட ஐ.எஸ்.ஐ உளவாளி
சென்னை: சென்னையில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ உளவாளி ஜாகிர்ஹூசேன் சென்னைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்ட முறை வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தீவிரவாதிகள் சதி திட்டம் தொடர்பாக திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
சென்னை, பெங்களூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ உளவாளியை நேற்று இரவு திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டான்.
இலங்கையில் இருந்து சுற்றுலா விசாமூலம் சென்னைக்கு அடிக்கடி வரும் அவன் ஒரே இடத்தில் தங்காமல் அடிக்கடி இடத்தை மாற்றி இருக்கிறான்.
சென்னையில் மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்காக முக்கிய இடங்களை நோட்டமிட்டு புகைப்படமாக எடுத்துள்ளான். நேரம் பார்த்து மும்பை பாணியில் கடல் வழியாக தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து தாக்க திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திருவல்லிக்கேணி லாட்ஜ்
சென்னையில் அவன் தங்குவதற்கு வசதியாக முன் கூட்டியே சிலர் லாட்ஜ்களில் அறை எடுத்து கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. மண்ணடி, திருவல்லிக்கேணி, பெரியமேடு உள்ளிட்ட இடத்தில் தங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தூதரகம்
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம், அண்ணா மேம்பாலம் ஆகிய இடங்களுக்கு ஆட்டோவில் சென்று பலமுறை ஜாகிர் ஹுசேன் நோட்டமிட்டுள்ளான். இந்த 2 இடங்களிலும் தாக்குதல் நடத்துவது எப்படி, என்பது குறித்து அவன் கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஷாப்பிங்மால்களில் உலா
இதேபோல் சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களுக்கும் அவன் வாடிக்கையாளர் போல சென்று வந்துள்ளான். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள்
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவரவாதிகளை கடல் வழியாக இலங்கைக்கு அழைத்து வந்து அங்கிருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
சென்னையில் தாக்குதல்
இதற்காக இலங்கையில் இருந்தபடியே பல்வேறு சதி திட்டங்களை தீட்டி ஜாகீர் ஹூசேன் அடிக்கடி சென்னைக்கு வந்து சதி செயல்களுக்கான முன் ஏற்பாடுகளை செய்து உள்ளது தெரியவந்துள்ளது.
மும்பை பாணியில்
மேலும் மும்பை பாணியில் தாக்குதல் நடத்தவும், தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவச் செய்யவும், இலங்கையில் இருந்து சென்னையில் ஆயுதங்களை கடத்திவரவும் திட்டமிட்டிருந்து தெரியவந்துள்ளது.
உளவுப்பிரிவு எச்சரிக்கை
கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய உளவு பிரிவு போலீசார் ஏற்கனவே ஒரு எச்சரிக்கை தகவல் அனுப்பி இருந்தனர். அதில் கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் அணு உலையை தாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அப்போது அணு உலைகளிலும் பல மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அணு உலைகளுக்கு பாதுகாப்பு
சென்னையில் ஜாகீர் உசேன் பிடிப்பட்டது மூலம் தமிழகத்தில் உள்ள அணு உலைகளிலும், கடலோர மாவட்டங்களிலும், பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications