மாதந்தோறும் ஒரு செயற்கை கோளை செலுத்த இஸ்ரோ திட்டம்- மயில்சாமி அண்ணாதுரை தகவல்
தூத்துக்குடி: பருவநிலை மாற்றத்துக்கான செயற்கை கோள் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொண்டு மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த 32 மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அப்போது, மயில்சாமி அண்ணாத்துரை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியா இதுவரை தொலையுணர்வு தொலைக்காட்சி, நேவிகேசன் உள்ளி்ட்ட 30க்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. வரும் காலங்களில் எங்கள் பணி இன்னும் அதிகம் இருக்க வேண்டும். இந்திய அளவி்ல் அனைத்து துறைகளும் சேர்ந்து அடுத்த 4 ஆண்டுகளில் 60 முதல் 70 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த உள்ளோம்.
இதற்காக மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோள் அனுப்பினால்தான் இந்த இலக்கை எட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அப்போது தான் அடுத்த 5 ஆண்டுகளில் இலக்கை அடைய முடியும். இதற்காக இந்திய விண்வெளி மூலம் திட்ட வரைவுகள் தயாராக இருக்கின்றன. கடந்த 10 மாதத்தில் 8 செயற்கை கோள்களை அனுப்பி உள்ளோம். நேவிகேசன் செயற்கை கோள் 7 அனுப்பியுள்ளோம்.
இவற்றின் செயல்முறை திட்டம் சரியாக உள்ளது. விரைவில் இந்த செயற்கை கோள்கள் தகவல் பயன்பாடு நடைமுறைக்கு வரும். நேவிகேசன் செயற்கை கோள்கள் மூலம் ஜிபிஎஸ் வசதி இந்தியா மற்றும் இந்தியாவை சுற்றிலும் சுமார் 1500 கி.மீ சுற்றளவிற்கு கிடைக்கும். இந்தியாவில் தரை, கடல் மற்றும் வான் வழி போக்குவரத்து மற்றும் தனி மனிதருக்கும் அவற்றின் பயன் கிடைக்கும். செய்தி மாற்றத்திற்கான செயற்கை கோள்கள், பருவநிலை மாற்றத்திற்கான இன்சாட் 3 டிஆர் என்னும் செயற்கைகோளும் வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என்றார் அவர்.