என்னங்க சொல்றீங்க லக்கானி, ஒரு நாள் லீவு விடனுமா.. மூக்கால் அழும் ஐடி நிறுவனங்கள்!
சென்னை: எல்லா ஐடி ஆபீஸுக்கும் சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளதை பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரசிக்கவில்லையாம். அதெப்படி லீவு விடச் சொல்லலாம் என்ற ரேஞ்சுக்கு எகிறிக் கொண்டிருக்கின்றனவாம் பல ஐடி நிறுவனங்கள்.
ஆனால் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள மே 16ம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் (ஐடி நிறுவனங்கள் உள்பட) சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவிக்குமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறைக்கு லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கும் உரிமையைத் தவற விட்டு விடக் கூடாது என்பதால், விடுமுறை கட்டாயம், அதைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லக்கானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

100 சதவீத வாக்குப்பதிவு
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில்100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்று லக்கானி வலியுறுத்தி வருகிறார். இதற்காக பல்வேறு விதமான பிரசாரங்களையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் மோசம்
சென்னையில்தான் பெரும்பாலும் வாக்குப் பதிவு மோசமாக இருக்கும். அதாவது குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் பலர் ஓட்டளிக்க வருவதே இல்லை. மேலும் இங்குள்ள ஐடி நிறுவனங்கள் விடுமுறை விடுவதும் இல்லை.

தேர்தலாவது புடலங்காயாவது
பல ஐடி நிறுவனங்கள் தேர்தல் நாளன்று ஆப்சன்ட் ஆகக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவே போடுகின்றனராம். தேர்தல் நடந்தால் உங்களுக்கு என்ன.. நமக்கு நிறைய வேலை இருக்கு.. என்று பல நிறுவனங்கள் கூறுவது சகஜம்.

ஆப்பு வைக்கும் லக்கானி
இப்படிப்பட்ட ஐடி நிறுவனங்களைத்தான் தற்போது லக்கானி குறி வைத்துள்ளார். கண்டிப்பாக அத்தனை பேரும் விடுமுறை விட வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை வரும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

3.5 லட்சம் ஐடி ஊழியர்கள்
தமிழகத்தில் வாக்களிக்கும் தகுதியுடன் 3.5 லட்சம் ஐடி ஊழியர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மெத்தப் படித்த இத்தனை பேரும் ஒருவர் பாக்கி இல்லாமல் வாக்களிக்க வேண்டும் என்பதில் லக்கானி ஆர்வமாக உள்ளார்.

லக்கானி சொல்வது என்ன?
இதுகுறித்து லக்கானி கூறுகையில் இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. வாக்களிக்கும் உரிமை அனைவருக்கும் தரப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதைத்தான் நான் அமல்படுத்த வலியுறுத்துகிறேன். விடுமுறை என்பது சட்டப்படியான நடவடிக்கை.

கண்டிப்பு
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய உத்தரவுகள் அனுப்பப்பட்டுள்ளன. தத்தமது மாவட்டத்தில் உள்ள தொழில்துறையினருடன் பேசி நிறுவனங்களுக்கு விடுமுறை விடுவது உறுதி செய்யுமாறு கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாப்ட்வேர் சபாபதிகள்
ஆனால் சாப்ட்வேர் நிறுவனங்கள்தான் சற்று ஜெர்க் ஆகிக் கிடக்கின்றனவாம். எதுக்குப்பா நமக்கெல்லாம் லீவு என்று அவர்கள் சலித்துக் கொள்கிறார்களாம். எங்களுக்கு மட்டும் விதி விலக்கு தாருங்கள் என்று அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளனராம்.

வேலை நடந்தாகனும் ப்ரோ!
இதுகுறித்து ஐடி நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், இது தொடர்ச்சியாக நடைபெறும் வேலை. இதை நிருத்த முடியாது. பல கட்டமைப்புடன் இணைந்த வேலை இது. ஒன்று நின்றாலும் மற்றவை பாதிக்கப்படும்.

மற்ற மாநிலத்துக்காரர்கள்தானே
மேலும் ஐடி ஊழியர்களில் பலரும் வெளி மாநிலத்தவர்கள்தான். அவர்களுக்கு இங்கு ஓட்டுரிமையே கிடையாது. அப்படி இருக்கும்போது மொத்தமாக விடுமுறை என்பது தேவையற்றது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எதிர்ப்பு தெரிவிக்கும் டிசிஎஸ்
டிசிஎஸ் நிறுவனம் இன்னும் விடுமுறை விடுவது குறித்து முடிவெடுக்கவில்லையாம். தேர்தல் ஆணைய உத்தரவை அது ஏற்கவில்லை என்கிறார்கள். காக்னிசன்ட் கருத்து தெரிவிக்கவில்லை. மற்ற நிறுவனங்களம் மெளனம் காக்கின்றன.
என்னவோ பண்ணுங்க பாஸ்.. ஆனால் ஓட்டுப் போட மட்டும் பெர்மிஷன் கொடுக்க மறந்துராதீங்க.. அம்புட்டுத்தான்.. டாட்!












Click it and Unblock the Notifications