போயஸ் தோட்டத்தை விடாமல் துரத்தும் வருமான வரித் துறை அதிகாரிகள்... அச்சத்தில் சசிகலா அன்ட் கோ?
போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மீண்டும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகாலம் போயஸ் தோட்டத்திலும் ஜெ.வின் நிழல் போலவும் வாழ்ந்தவர் சசிகலா. இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து விட்ட நிலையில் கடந்த மாதம் சசிகலாவின் உறவினர் வீடு மற்றும் அலுவலகத்தில் மாபெரும் ரெய்டு நடத்தப்பட்டது.
அதிகாரிகள் 5 நாட்கள் ரெய்டு
தமிழகம் முழுவதும் 197 இடங்களில் ஐடி துறையினர் ரெய்டு நடத்தினர். திருமண கோஷ்டி போல் மணமக்களின் பெயர் ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு ரெய்டு நடத்தினர். குறிப்பாக விவேக் ஜெயராமன் வீடு, திவாகரன் வீடு, கல்லூரி, கிருஷ்ணப்பிரியாவின் வீடு, தினகரனின் பண்ணை வீடு, ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகம் என ரெய்டு சுமார் 5 நாட்களுக்கு நீடித்தது.
ரூ.1770 கோடி மதிப்பிலான சொத்துகள்
ஐடி அதிகாரிகள் நடத்திய ரெய்டில் ரூ. 1770 கோடி மதிப்பிலான சொத்துகள், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரிடமாக அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரித்து வந்தனர்.
சசிகலாவின் அறை
இந்த ரெய்டுகள் முடிந்த சில நாட்களில் வருமான வரித் துறையினர் போயஸ் கார்டனில் நள்ளிரவில் ரெய்டு சென்றனர். அங்கு சசிகலா வாழ்ந்த 4 அறைகளிலும், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் அறையிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஒரு வேன் முழுக்க ஜெ.வுக்கு வந்த கடிதங்கள், பென் டிரைவ்கள், லேப்டாப்கள் என அள்ளிச் சென்றனர்.
12 இடங்களில் மீண்டும் ரெய்டு
மாபெரும் ரெய்டின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மதுபான தொழிற்சாலை, இளவரசியின் மருமகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான அடையாறு இல்லம், படப்பையில் உள்ள சாயி நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடைபெற்றது. இந்நிலையில் இன்று போயஸ் தோட்டத்தில் பழைய ஜெயாடிவி அலுவலகத்திலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்திலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதனால் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.