இதோ இதுதான் ரெய்டுக்குள்ளான இளவரசி மகள் வீடு.. பரோலில் வந்த சசிகலா இங்குதான் தங்கியிருந்தார்!
பரோலில் வந்து சசிகலா தங்கியிருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் சென்னை தி.நகர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
சென்னை : கணவர் நடராஜனை பார்க்க பரோலில் வந்த சசிகலா தங்கியிருந்த இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் சென்னை தி.நகர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
கணவர் நடராஜன் உடல் நிலை பாதிக்கப்பட்டு காரணமாக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உறுப்பு தான மையத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருந்தார். பின்னர் சில நாள்கள் கழித்து மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணவரைப் பார்க்க பரோல் கோரி சசிகலா விண்ணப்பித்திருந்தார். பரோலில் வந்த சசிகலா எங்கு தங்குவது என்ற கேள்வி எழுந்தபோது, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
5 நாள்கள் பரோல் பெற்ற சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இன்று அதிகாலை 8 பேர் கொண்ட குழுவினர் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
ஜெயா டிவியானது தினகரன் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அதில் பரோலில் வந்து சசிகலா தங்கியிருந்த கிருஷ்ணப்ரியா வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது.
இதேபோல் அடையாறில் உள்ள தினகரன் வீடு, மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீடு, மன்னார்குடியில் உள்ள திவாகரன் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.