பத்தோடு பதினொன்றாகும் ஐடி ரெய்டுகள்.... இதுவரை நடந்த ரெய்டிகளின் நடவடிக்கை என்ன?
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் வருமான வரி சோதனைகள் நடத்தப்படும் போதிலும் இதுவரை அதனால் எடுக்கப்பட்ட முடிவுகள், நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியானதில்லை.
சென்னை: மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித் துறையினர் இதுவரை தமிழகத்தில் பல்வேறு முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடத்திவிட்டனர். ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றால் பதில் இல்லை.
வரி ஏய்ப்பு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைப்பது உள்ளிட்ட புகார்களின் கீழ் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
இந்நிலையில் தமிழகத்தை பொருத்தவரை ஏராளமான இடங்களில் ஐடி ரெய்டுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அதில் என்ன சிக்கியது, தொடர் நடவடிக்கை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
கட்டுகட்டாக பணம்
கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என்று அறிவித்தது. இதையடுத்து புதிய ரூ. 2000 நோட்டுகள் தட்டுப்பாடு நிலவிய நிலையில் மணல் மாபியா சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தியதில் கட்டுகட்டாக புதிய ரூ.2000 நோட்டுகள் சிக்கின.
தலைமை செயலகத்தில்...
சேகர் ரெட்டியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தலைமை செயலாளராக இருந்த ராம் மோகன ராவ் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதையடுத்து அங்கும் சில ரொக்க பணமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அந்த தொகுதி மக்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது என புகார் எழுந்தது. இதையடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி வீடு, சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீடு, ராதிகாவுக்கு சொந்தமான ராடன் நிறுவனம் என பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இதில் அமைச்சர் வீட்டில் ரூ. 89 கோடி ரொக்கமும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மெர்சலை ஆதரித்த விஷால்
மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நடிகர் விஷால் ஆதரித்தும் பாஜக பிரமுகர் ஒருவருக்கு கண்டனம் தெரிவித்தும் பேசியிருந்தார். இதையடுத்து அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. தற்போது தமிழகத்தில் மிகப்பெரிய ரெய்டாக கருதும் அளவில் சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது.
நடவடிக்கை இல்லையே
மேற்கண்ட இடங்களில் ரெய்டுகள் நடத்தப்பட்டு அங்கிருந்து என்ன ஆவணங்கள் சிக்கின, எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்கள் ஏதும் இல்லை. கணக்கில் வராத பணத்தை வைத்திருந்ததாக கூறப்படுபவர்களின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. இதனால் இந்த ரெய்டுகளினால் மடியில் கனமிருந்தாலும் பயப்படத் தேவையில்லை என்றே கருதப்படுகிறது. எனவே ஜெயா டிவி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகள் முந்தைய ரெய்டுகளை போல் பத்தோடு பதினொன்றாக கடந்து போகும்.