விவேக் மாமனார் பாஸ்கரிடம் 51 மணி நேரம் கிடுக்கி பிடி போட்ட அதிகாரிகள் - ரெய்டு முடிந்தது
விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நிறைவடைந்தது.
சென்னை: சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனை 51 மணிநேரத்திற்குப் பின்னர் முடிவுக்கு வந்து விட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் 3-வது நாளாக தொடர்ந்து வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சசிகலா, தினகரன் உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக 135 இடங்களில் இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் விவேக் மாமனார் பாஸ்கர் வீட்டில் சோதனை முடிவடைந்துள்ளது.
பாஸ்கர் யார்
விவேக்கின் மாமனாரை கட்டை பாஸ்கர் என்று அழைப்பது உண்டு. அவர் சர்ச்சைக்குரிய பிரமுகர் ஆவார். அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளனவாம். அவர் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் வருமான வரித் துறை புலனாய்வு பிரிவினரால் தேடப்படும் குற்றவாளி என்று கூறப்படுகிறது.
வளர்ப்பு மகனாக பாவிப்பு
இளவரசியின் மகனான விவேக் மீது ஜெயலலிதாவுக்கு அளவு கடந்த பாசம் இருந்தது. அவர் கை குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தவர் என்பதால் கிட்டதட்ட விவேக் தனது வளர்ப்பு மகனாகவே ஜெயலலிதா பாவித்தார்.
ஜெ.ஏன் செல்லவில்லை
விவேக் ஜெயராமனுக்கும் பாஸ்கரின் மகள் கீர்த்தனாவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வானகரத்தில் திருமணம் நடைபெற்றது. வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணத்தை போல் இதையும் கோலாகலமாக ஜெயலலிதா கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மணமகளின் தந்தை பாஸ்கர் சர்ச்சைக்குரிய பிரமுகர் என்பதால் ஜெயலலிதா அந்த திருமணத்துக்கு போகாமல் தவிர்த்து விட்டார்.
தங்க நகைகள்
சென்னை அண்ணா நகரில் உள்ள விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வீட்டில் கடந்த வியாழக்கிழமை சோதனை தொடங்கியது. ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண் கலாட்டா
அப்போது அங்கு வந்த விவேக்கின் உறவினர் சித்ரா என்ற பெண், தான் பாஸ்கர் வீட்டில் 200 சவரன் தங்க நகைகளை கொடுத்து வைத்திருந்ததாகவும், அதை தனக்கு திருப்பி தரவேண்டும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மூன்று நாட்களாக சுமார் 51 மணி நேரம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து இன்று முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கைப்பற்றப்ப பொருட்கள் பற்றி அதிகாரிகள் பின்னர் அறிவிப்பார்கள்.