வருமான வரி சோதனையில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை... தினகரனுக்கு ‘நோஸ்கட்’ கொடுத்த விவேக்
வருமான வரி சோதனையில் அரசியல் உள் நோக்கம் எதுவும் இல்லை என்கிறார் விவேக்.
Recommended Video

சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்தார்கள்; அதில் வேறு எந்த நோக்கமுமே இல்லை என இளவரசியின் மகன் விவேக் பகிரங்கமாக பேட்டி கொடுத்திருப்பது தினகரனை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
சசிகலா குடும்பத்தில் ஒருவரையும் விடாமல் 355 பேரை இலக்கு வைத்து வருமான வரித்துறை கஸ்டடிக்கு கொண்டு வந்திருக்கிறது. இதனால் பதறிப் போன தினகரன், இது அரசியல் உள்நோக்கம் கொண்டது... என லாவணிக் கச்சேரி பாடினார்.

புகழேந்தி மவுனம்
தினகரனின் இக்கச்சேரிக்கு அவரது அம்மா கோஷ்டியினரும் பின்பாட்டு பாடத் தொடங்கினர். ஆனால் வருமான வரி சோதனைக்குள்ளான தினகரனின் படுதீவிரமான ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி, ஸ்ருதியை அடக்கியே வாசித்தார். வருமான வரித்துறை அதிகாரிகள் நல்லபடியாக நடத்தினார்கள்; விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன் என கூறினார்.

விவேக் பிரஸ் மீட்
அவரைத் தொடர்ந்து 5 நாட்கள் வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது போல் இருந்தவர் விவேக் இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார். சென்னையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த விவேக், எனக்குத் தெரிந்தவரையில் அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களது கடமையைச் செய்தார்கள்.

கேள்வி கேட்டார்கள்
அவர்களுக்கு என்னுடைய தரப்பு விளக்கத்தைத் தந்தேன். அவர்கள் இனி சில நாட்களோ அல்லது மாதம் கழித்தோ அழைத்தால் அப்போதும் தேவையான விளக்கம் தர தயாராக இருக்கிறேன். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நான் என்னுடைய விளக்கத்தை தெரிவித்தேன்.

ஆவணங்கள் சமர்ப்பிப்பேன்
என்னுடைய மனைவிக்கு திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள் பற்றி கேட்டனர். அதற்கான உரிய ஆவணங்களை ஓரிரு நாட்களில் சமர்ப்பித்துவிடுவேன் என பட்டும படாமல்தான் விவேக் கூறினார். தினகரனைப் போல அய்யோ பழிவாங்குகிறார்கள்; அரசியல் நோக்கம் என்றெல்லாம் கதறவில்லை. தினகரனின் கதறல்களுக்கும் குமுறல்களுக்கும் விவேக் நோஸ்கட் கொடுத்திருக்கிறார் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications