ஜெ.வுக்கு பிறகு அதிமுகவில் வலிமையான தலைவர் இல்லை- தீபா
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் வலிமையான தலைவர் இல்லை என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவில் வலிமையான தலைவர் யாரும் இல்லை என்றும், எடப்பாடி தலைமையிலான ஆட்சி விரைவில் கலைக்கப்பட வேண்டும் என்றும் தீபா தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். ஜெயலலிதா சாயலில் இருந்த இவருக்கு தொண்டர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அமைப்புக்கு ஆள் சேர்ப்பதில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
அப்போது விண்ணப்ப படிவம் விற்பனையில் முறைகேடு ஏற்பட்டது. மேலும் கணவர் மாதவனுடன் தீபா சுமுக உறவில் இல்லாமல் அவர் தீபாவிடம் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்கியதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்து தீபா பேரவையை பலர் கலைத்துவிட்டனர்.

எட்டி பார்ப்பது
இந்நிலையில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டுமே தீபா தலையிட்டு அறிக்கை விடுவார். மற்றபடி முழு நேர அரசியலில் ஈடுபட்டவில்லை என்று தொண்டர்கள் குற்றம்சாட்டினர். அண்ணா பிறந்தநாளான நேற்று அண்ணா சிலைக்கு தீபா மாலை போட போன போது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தீபாவை முற்றுகையிட்டு ரகளை செய்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் தீபா வீட்டிற்கு வந்து விட்டார் மாதவன்.

ஜெ.சமாதியில் மரியாதை
நள்ளிரவில் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்ற தீபாவும், மாதவனும் அங்கு மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தீபா அளித்த பேட்டியில், அதிமுக கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதே தனது லட்சியம்.

பொதுக் குழு தேவையற்றது
கட்சியின் பொதுக்குழுவை கூட்டியது தேவையற்றது. லஞ்சப் பணத்தை வைத்து தினகரன் தரப்பினரும், ஆளும் தரப்பினரும் பேரம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.

வலிமையான தலைவர் இல்லை
பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கலைக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிப்பது ஜனநாயக விரோதம். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவில் வலிமையான தலைவர்கள் இல்லை என்றார்.

சமாதி தியானங்கள்
ஜெயலலிதா சமாதியில் நள்ளிரவில் அரசியல்வாதிகள் தியானம் செய்வது குறைந்திருந்த நிலையில் மீண்டும் அந்த டிரெண்டை தொடங்கி வைத்துள்ளார் தீபா. இன்னும் யார் யாரெல்லாம் போய் தியானம் செய்யப் போகிறார்களோ.












Click it and Unblock the Notifications