சேப்பாக்கத்தில் திரண்ட அரசு ஊழியர்கள்... ஆர்பாட்டத்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
சென்னை சேப்பாக்கத்தில் அரசு ஊழியர்களின் ஆர்பாட்டம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட ஆர்பட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'வின் பேரணிக்கு தடை விதித்துள்ள போலீசார், 15 நிபந்தனைகளுடன், ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதி அளித்துள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்க சென்னை வந்தவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். எனினும் காவல்துறையினரின் தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னையில் திரண்டுள்ளனர். இதனால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
ஆர்பாட்டம் நடைபெறும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி பேரணி கிளம்பினால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
சென்னையில் ஆர்பாட்டம் நடத்துவதற்காக பல பகுதிகளில் இருந்தும் கிளம்பிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.