சாதகமான பதில் வராவிட்டால் செப். 7 முதல் காலவரையற்ற ஸ்டிரைக் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை
அரசு தங்களுக்கு சாதகமான பதிலை தராவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
சென்னை: அரசுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அதற்கு முன்பு 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 7முதல் காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
இவ்வாறு போராட்டம் தொடர்ந்தால் அரசு பணிகள் பாதிக்கும் என்பதால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகளை செப்டம்பர் 4ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்தது.
அதன்படி தலைமைச் செயலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும், ஜாக்டோ ஜியோ சார்பில் அதன் தலைமைக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். ஆனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதனிடையே திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் தொடரும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியுள்ளனர். அரசிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லையெனில் செப்டம்பர் 7ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதேபோல் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications