கருங்குளம், சிராவயலில் ஜல்லிக்கட்டு: துள்ளி வரும் காளைகளை அடக்கும் இளம் வீரர்கள்
திருச்சி: மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. மேலும் சிவகங்கை மாவட்டம் சிராவயலிலும் இன்று ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் 600 காளைகள் கலந்து கொண்டுள்ளன. 350 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கி வருகிறார்கள்.
வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து வரும் காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கி வருகிறார்கள். பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் பல்வேறு இடங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்ததன் விளைவாகவே தடை நீங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சிராவயல்:
சிவகங்கை மாவட்டம் சிராவயலிலும் இன்று ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. சிராவயலில் உள்ள தேனாட்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. முதலில் கோவில் காளை திறந்துவிடப்பட்டது. இதில் 200 காளைகள் பங்கேற்றுள்ளன. காளைகளை இளைஞர்கள் அடக்கி வருகிறார்கள்.