ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை: பிரதமரிடம் பேசுமாறு பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கருணாநிதி கடிதம்
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் எவ்வித இடையூறும் இன்றி நடைபெற பிரதமரை நேரில் சந்தித்து, தேவையான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் எடுப்பார் என திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணனுக்கு, கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உறுதியாக நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அதில், கலைஞர் தொலைக்காட்சியில், ‘ஜல்லிக்கட்டு போட்டிகளை இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி நடத்த எந்த வகையிலாவது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நீங்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன்.
தமிழர் திருநாள், பொங்கல் நாள், புத்தாண்டு தொடக்கம் என்பதையொட்டி தமிழர்களின் பண்டைய வீரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதை தாங்கள் நன்றாகவே அறிவீர்கள்.
தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 2007ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு போட்டிகள் அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடத்தப்பட்டன. அதைப்போலவே 2008ம் ஆண்டும் தி.மு.க. அரசால் முழு வீச்சில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்றம் விதித்திருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
2009ம்ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நெறிப்படுத்துவதற்கென சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததோடு, தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இந்த நிலையில் தாங்களே பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு எந்தவிதமான இடையூறுமின்றி இந்த ஆண்டும் நடைபெறத் தேவையான முயற்சிகளை எல்லாம் உடனடியாக எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.