அடாத மழையிலும் விடாமல் தொடரும் ஜல்லிக்கட்டு புரட்சி
கடும் வெயில், பனியையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் இப்போது மழையிலும் விடாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மதுரை: உலகப் புகழ்பெற்று விட்டது அலங்காநல்லூர். தமிழகர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு அழிந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக புரட்சி நடத்தி வருகின்றனர்.
மாணவர்கள், இளைஞர்கள் தொடங்கிய இந்த புரட்சி வேள்வியில் குடும்பம் குடும்பமாக பங்கேற்றுள்ளனர். மதுரையில் பிரசித்தி பெற்ற தமுக்கம் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டதை அடுத்து அனைவரும் போராட்ட களத்தில் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் இருந்தது. இரவில் பனி கொட்டியது. இந்த நிலையில் நேற்று மழை பெய்தது.
தொடரும் புரட்சி
வெயிலோ, பனியோ, மழையே எதுவென்றாலும் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி போராட்டம் தொடர்ந்து வருகிறது. மதுரையில் நேற்றிரவு தொடங்கி மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே வெள்ளம் தேங்கினாலும் போராட்டம் தொடங்கி வருகிறது.
அணையாத நெருப்பு
அடாது மழை பெய்து வந்தாலும் ஜல்லிக்கட்டு போராட்டம் விடாது நடைபெறும் என்று கூறி தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். முழு அடைப்பு நாளான நேற்று 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
சுத்தம் செய்த மாணவர்கள்
இதுநாள்வரை வீடுகளில் எந்த வேலையும் செய்யாமல் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருந்த மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு பின்னர் வேறு தளத்தில் பயணிக்கின்றனர். பொறுப்புடன் இடத்தை சுத்தம் செய்வது, உணவு, தண்ணீர் கொடுப்பது என பணிகளை செய்கின்றனர். மழையில் நீர் தேங்கிய இடத்தை மணலை போட்டு நிரப்பி மக்கள் அமருவதற்கு ஏற்ப மைதானத்தை தயார் செய்துள்ளனர்.
மவுன புரட்சி
ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் 6வது நாளாக இன்று போராட்டம் நடைபெறுகிறது. மழை பெய்தாலும் வாயில் துணியை கட்டி மவுன போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடைபெறும் இந்த போராட்டம் ஒரு கட்டுக்கோப்பான அறவழி போராட்டம் என்று உலகமே வியக்கும் அளவிற்கு நடைபெற்றுவருகிறது.
நிரந்தர தீர்வு
மழையினால் ஏற்படும் குப்பைகளை அகற்றி தங்களின் இடத்தை சுத்தமாக வைத்து போராடி வருகின்றனர். அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்தினாலும் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பல பகுதிகளில் மழை
கடலூரில் பெய்து வரும் மழையால் போராட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்து தபால் அலுவலக பேருந்து நிறுத்தத்துக்கு ஜல்லிக்கட்டு போராட்டக்களம் மாற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், அரியலூர், விழுப்புரம், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட இடங்களில் இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. அடாது மழை பெய்தாலும் விடாமல் போராட்டம் நடத்துவோம் என்று கூறி அமர்ந்துள்ளனர் மாணவர்கள். ஜல்லிக்கட்டு புரட்சி தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
|
திருச்சியில் மழையில் போராட்டம்
திருச்சியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் 5வது நாளக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மணிநேரத்திற்கும் மேலாக திருச்சியில் கனமழை பெய்து வருகிறது. அதனையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு வேண்டும்
மழை பெய்தாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம் எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். வீட்டை விட்டு வெளியவே வராத பெண்கள் நாங்கள். இன்றைக்கு எங்களின் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்பதற்காக வீதியில் இறங்கி போராடுகிறோம். வெல்லும் வரை போராடுவோம் என்கின்றனர் பெண்கள்.