ஜெ.வின் அருப்புக்கோட்டைக் கூட்டத்தில் காயமடைந்தவர் மரணம்... பிரச்சாரக் கூட்ட பலி 5ஆக உயர்வு
மதுரை: ஜெயலலிதாவின் அருப்புக்கோட்டை கூட்டத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர், சிகிச்சையில் பலனின்றி உயிரிழந்தார். இதனால், ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தமாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்ப்பட்டியலை அறிவித்த ஜெயலலிதா, அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, கடந்த 9, தேதி சென்னையில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரத்தை தொடங்கிய ஜெயலலிதா, அடுத்ததாக 11ம் தேதி விருத்தாச்சலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அன்றைய தினம் 3 மணிக்கே ஜெயலலிதா மேடையேறினார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 11 மணியளவிலேயே கூட்டத்தில் அமர வைக்கப்பட்ட மக்கள் வெயிலிலேயே சுமார் 4 மணி நேரங்களாக காத்துக் கிடந்தனர்.
இதில், வெப்பத் தாக்குதலுக்கு ஆளான சிலர் மயக்கமடைந்தனர். ஜெயலலிதாவின் உரைகு பின்னரே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு மயங்கி விழுந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்தாண்டை விட இம்முறை வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால், அரசு அதிகாரிகளே மாவட்ட வாரியாக, பொதுமக்கள் தேவையில்லாமல் பகல் நேரங்களில் வெளியே சுற்ற வேண்டாம் என எச்சரித்த நிலையில், இவ்வாறு மக்கள் வெயில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனபோதும், தன் பிரச்சார நேரத்தை மாற்றிக் கொள்ளவில்லை ஜெயலலிதா. இதனால், கடந்த புதனன்று சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திலும் வெயிலின் கொடுமைக்கு இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, கடந்த 15ம் தேதி அருப்புக்கோட்டையில் ஜெயலலிதா பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கீழே விழுந்து காயமடைந்த மணிகண்டன் என்ற இளைஞர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இவர் நேற்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.