ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரம் செய்யும் 'அம்மா': நேரில் அல்ல எல்.சி.டி. மூலம்
திருச்சி: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியிருந்தபோது அவரது முகத்தையும், இரட்டை விரல்களை உயர்த்திக் காட்டுவதையும், மருத்துவமனையில் அவர் சாப்பிடும் காட்சியையும் ஊர் ஊராக வீடியோவில் காட்டி காட்டியே பிரசாரம் செய்தது போல, இந்த முறை ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதாவின் பேச்சுக்களை எல்சிடி திரை மூலமாக தொகுதி முழுவதும் ஒளிபரப்பி பிரசாரம் செய்ய அதிமுகவினர் திட்டமிட்டு வருகின்றனராம்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்ததையடுத்து அவரின் முதல்வர் பதவியும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. இதையடுத்து ஸ்ரீரங்கத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது.
வளர்மதி
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட இணை செயலாளரும், மாநகராட்சியின் 58-வது வார்டு கவுன்சிலருமான வளர்மதி போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிட வளர்மதி தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா
ஜெயலலிதா தற்போது சுய வீட்டுக் காவலில் உள்ளார். வெளியில் வருவதே இல்லை. தனது அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரும் வரை வெளியில் வருவதில்லை என்ற சபதத்தில் அவர் உள்ளதாக தெரிகிறது.
அதிமுக
அதிமுக சார்பில் வழக்கம் போல அமைச்சர்கள் படை களம் இறங்கவுள்ளது. வீட்டிலிருந்தபடி இவர்களை வழி நடத்தப் போகிறார் ஜெயலலிதா. மறுபக்கம் திமுக, நேரு தலைமையில் 64 பேரை களம் இறக்கியுள்ளது. மேலும் மு.க.ஸ்டாலின் தீவிரப் பிரசாரம் செய்யவுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோரும் பிரசாரம் செய்ய வருவார்கள். எனவே திமுகவினர் உற்சாகமாக களப் பணியில் குதித்துள்ளனர்.
அம்மா
அம்மா வராத தேர்தலா என்ற சோகத்தில் அதிமுகவினர் உள்ளனர். இருந்தாலும் வெற்றி பெற்றாக வேண்டும், அதுவும் பெரிய வெற்றியாக அது இருக்க வேண்டும் என்பதில் அதிமுகவினர் உள்ளனர். இதற்காக என்னவெல்லாம் செய்யலாம் என்ற யோசனையிலும் அவர்கள் உள்ளளனர்.
எல்.சி.டி.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேசியது, அவர் ஸ்ரீரங்கத்தில் நடந்த அரசு விழாக்களில் பேசியது ஆகியவற்றை எல்.சி.டி. திரை மூலம் ஒளிபரப்பி மக்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளது அதிமுக.
நடனம்
லோக்சபா தேர்தலில் அதிமுக வெளியிட்ட பாடல்களுக்கு நடன கலைஞர்களை ஆட வைக்க உள்ளனர். கலை நிகழ்ச்சிகள் மூலமும் மக்களை கவர உள்ளனர்.
எம்.ஜி.ஆர்.
1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் இரட்டை விரலை காண்பிப்பது, சாப்பிடுவது உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து அதை தமிழகம் முழுவதும் டிவியில் ஒளிபரப்பி அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர். தற்போது அதே பாணியை ஜெயலலிதாவுக்கும் கையாள உள்ளனர்.