தமிழகத்தில் தொடர் மின்வெட்டு... அதிகாரிகளுடன் ஜெ. அவசர ஆலோசனை
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மின்வெட்டு நிகழ்வதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்தே தமிழகத்தில் கடும் வெயில் அடித்து வருகிறது. கோடைக்காலம் இந்த முறை மிகக் கடுமையாக இருந்ததாலும், காற்று வீசுவது குறைந்து விட்டதாலும் மின் தேவை கிடுகிடுவென அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற சப்ளை சரியாக இல்லாததால் பல பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்சினை ஏற்பட்டது.
இருப்பினும் சட்டசபைத் தேர்தல் இடையில் குறுக்கிட்டதால் பெருமளவில் மின்தடை நிலவாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது தேர்தல் முடிந்து அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டது. இந்த நிலையில் பல பகுதிகளில் பல மணி நேர மின்தடை ஏற்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளை நேரில் அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது தமிழகத்தில் தற்போது உள்ள மின்சார உற்பத்தி, மின் தேவை, மின்சப்ளை மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, வல்லூர் அனல் மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் நிலையத்தின் முதலாவது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு சுமை கூடியுள்ளது.