வீடுகளில் 100 யூனிட் வரை மின்சாரக் கட்டணம் கிடையாது.. ஜெயலலிதா முதல் கையெழுத்து!
சென்னை: வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் வரை கட்டணம் கிடையாது என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றும் வகையிலான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்தைப் போட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொண்டார். அதன் பின்னர் தலைமைச் செயலகம் சென்ற அவர் அங்கு முதலில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று மின்சாரக் கட்டணத்தில் சலுகை அளிக்கும் திட்டம் தொடர்பான கோப்பாகும்.

அதன்படி வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் ரத்து செய்யப்படும். மேலும் விசைத் தறிகளுக்கு 750 யூனிட் வரையிலான மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது. அதேபோல கைத்தறிகளுக்கு 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வீடுகளுக்கான மின் கட்டணத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையால் மின்வாரியத்திற்கு கூடுதலாக ரூ. 1607 கோடி செலவாகும். இதை மானியமாக அரசே வழங்கும்.
இன்று முதல் இவை அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது வெளியிடப்பட்ட வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்திற்குக் கட்டணம் கிடையாது எந்று ஜெயலலிதா அறிவித்ததற்கு பலரும் விமர்சனம் தெரிவித்தனர். இது சாத்தியமில்ல என்று ஒரு தரப்பும், மின்சாரமே இல்லை, இந்த நிலையில் இது எப்படி சாத்தியம் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் இந்தத் திட்டத்திற்குத்தான் முதல்வர் ஜெயலலிதா முதலில் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவின்படி, தற்போது 100 யூனிட் வரை பயன்படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications