ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயகப் படுகொலை நடக்கிறது: வைகோ
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயக மரபுகள் குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்று வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்டது. ஆளும் கட்சியின் கண் அசைவுக்கு ஏற்ப இயங்கி வரும் மாநில தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்கு உரிய கால அவகாசம்கூட அளிக்காமல், வேட்புமனு தாக்கல் தேதிகளை அறிவித்தது. தமிழகம் முழுவதும் ஆளும் கட்சியினர் மட்டுமே போட்டியிட வேண்டும். எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களே களத்திற்கு வரக்கூடாது என்ற நோக்கத்தில் பல இடங்களில் ஆளும் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திட பா.ஜ.க. மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காலை 9 மணியிலிருந்தே புதுக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர்.
ஆனால், அ.தி.மு.க.வினர் நூற்றுக்கணக்கான ஆளும் கட்சி தொண்டர்களைக் கொண்டு வந்து, காவல்துறை உதவியுடன் அலுவலகத்தில் இடையூறு செய்தது மட்டுமின்றி, எதிர்கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு அடாவடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சியினரின் அத்துமீறலை வேடிக்கை பார்த்த காவல்துறை, எதிர்க்கட்சியினரை கைது செய்துள்ளது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணிக்கு முடிவுற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்துவிட்டார். இதேபோன்று, விழுப்புரம் மாவட்டத்திலும் மைலம் ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற எதிர்க்கட்சியினர் தடுக்கப்பட்டதுடன், அவர்கள் மீது ஆளும் கட்சியினர் கொலைவெறித் தாக்குதலும் நடத்தி உள்ளனர். இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நடைபெற்று இருக்கின்றது.
உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேடுகளுக்கு மாநில தேர்தல் ஆணையமும் துணைபோவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எதிர்கட்சிகள் போட்டியிடவே அனுமதிக்காமல் எதேச்சதிகார மனப்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு நடந்துகொள்வது பச்சை ஜனநாயகப்படுகொலை ஆகும். இதற்கு தேர்தல் நடப்பதாக மாய்மாலம் காட்டுவது தேவையற்றது.
ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயக மரபுகள் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு உள்ளாட்சி இடைத்தேர்தல் சான்று ஆகும். எதிர்கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் தடுக்கப்பட்ட இடங்களில், ஆளும் கட்சியினரின் வேட்புமனுக்களை ரத்து செய்துவிட்டு, தேர்தல் தேதி அட்டவணையை மாற்றி அறிவித்து, உண்மையான ஜனநாயகத் தன்மையுடன் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications