"தேமுதிக"வை மட்டும் ஒதுக்கி ஓரம் கட்டிய ஜெ... பாமக, திமுக, பு.த.விலிருந்து வந்தவர்கள் பரவாயில்லை!
சென்னை: சமீபத்தில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பாமக கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்களில் இருவர் தவிர மற்றவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.
திமுகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரிதிஇளம்வழுதி, தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு மாறிய பண்ரூட்டி ராமசந்திரனுக்கு மீண்டும் ஆலந்தூரில் போட்டியிடுகிறார்.
பாமகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பு.தா.இளங்கோவனுக்கு தருமபுரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேமுதிகவை சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜன், திட்டக்குடி தொகுதி உறுப்பினர் தமிழழகன்,திருத்தணி எம்எல்ஏ அருண் சுப்பிரமணியன், பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண் பாண்டியன், ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன்,சேந்தமங்கலம் தொகுதியின் சாந்தி, மதுரை மத்தி எம்எல்ஏ சுந்தரராஜன்,செங்கம் தொகுதி எம்எல்ஏ சுரேஷ்குமார் ஆகிய 8 பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவில் இணைந்தனர். இதனை தொடர்ந்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து பறிபோனது.
இதேபோல புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டை தொகுதி உறுப்பினர் ராமசாமி,பாட்டாளி மக்கள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் கலையரசு ஆகியோர் அதிமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிலையில் இன்று வெளியான வேட்பாளர் பட்டியலில் பாண்டியராஜன்- ஆவடி தொகுதி, கலையரசு- அணைக்கட்டு தொகுதி தவிர மற்ற நபர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
2011 சட்டசபைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிகவின் மாபா பாண்டியராஜனுக்கு, இப்போது ஆவடி தொகுதியும் பாமகவின் கலையரசுக்கு மீண்டும் அணைக்கட்டு தொகுதியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேமுதிகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய அருண்சுப்ரமணியன், தமிழழகன் , சாந்தி, அருண்பாண்டியன், மைக்கல் ராயப்பன், சுந்தரராஜன், சுரேஷ்குமார், மற்றும் புதிய தமிழகத்தில் இருந்து அதிமுகவில் இணைந்த ராமசாமி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மொத்தத்தில் பிற கட்சிகளிலிருந்து அதிமுகவுக்கு வந்தவர்களில் அதிக அளவில் ஓரம் கட்டப்பட்டவர்கள் தேமுதிகவினர்தான். அதிலும் விஜயகாந்த் ஆதரவு தேமுதிகவினரால் சட்டசபைக்குள் வைத்துத் தாக்கப்பட்ட சுந்தரராஜனை ஜெயலலிதா கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டது அவரது ஆதரவாளர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.